search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தியாகராயநகர் நகைக்கடையில் கொள்ளை: 5 கிலோ தங்கநகைகளுடன் தப்பிய மேலும் ஒரு கொள்ளையன் சிக்கினான்

    சென்னை தியாகராயநகர் நகைக்கடையில் நடந்த கொள்ளை வழக்கில் 5 கிலோ தங்கநகைகளுடன் தப்பிய மேலும் ஒரு கொள்ளையனை போலீசார் செய்யாறில் சுற்றி வளைத்தனர்.
    சென்னை:

    சென்னை தியாகராயநகர் சாருல்லா தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரகுமார் (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள மூசா தெருவில் உத்தம் ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகை மொத்த வியாபார கடை நடத்தி வந்தார்.

    இவரது கடையின் பூட்டை உடைத்து கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இரவு மர்ம நபர் 5 கிலோ எடையுள்ள தங்க-வைர நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டார். கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் தினகரன் மேற்பார்வையில், தென் சென்னை இணை கமிஷனர் ஏ.ஜி.பாபு, தியாகராயநகர் துணை கமிஷனர் ஹரிகரபிரசாத், உதவி கமிஷனர் கலியன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படையினர் கொள்ளையர்கள் பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    கண்காணிப்பு கேமரா காட்சியில், 2 கொள்ளையர்கள் மோட்டார்சைக்கிளில் வருவது பதிவாகி இருந்தது. பின்னர் நகைகளை கொள்ளையடித்த பிறகு இரு கொள்ளையர்களும் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விடுகின்றனர்.

    இந்த கேமரா காட்சியை அடிப்படையாக வைத்து கொள்ளையர்கள் இருவரை பற்றியும் போலீசார் துப்பு துலக்கினார்கள். கொள்ளையர்கள் இருவரில் ஒருவர் பெயர் சுரேஷ் என்ற மார்க்கெட் சுரேஷ் (வயது 43) என்றும், சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. திருவள்ளூர் மாவட்டம் புட்லூரில் பதுங்கி இருந்த சுரேசையும், அவரது காதலியையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

    காதலிக்கு 20 பவுன் தங்க நகைகளையும், 7 கிலோ வெள்ளிக்கட்டிகளையும் சுரேஷ் பரிசாக கொடுத்திருந்தார். அவற்றை போலீசார் மீட்டனர். கைதான இருவரும் நேற்று சென்னை மாம்பலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒரு கொள்ளையன் பெயர் அப்பு வெங்கடேசன் என்பதாகும். அவர் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர். கொள்ளையடித்த 5 கிலோ நகைகளுடன், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அவர் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்தது. அவரை கைது செய்ய போலீசார் செய்யாறு விரைந்தனர்.

    அவரது காதலி வீட்டில் பதுங்கி இருந்தபோது தனிப்படை போலீசார் அவரை நேற்று மாலை சுற்றி வளைத்ததாக தகவல் வெளியானது. இது பற்றி போலீஸ் அதிகாரிகள் தகவல் எதையும் வெளியிட மறுத்துவிட்டனர்.
    Next Story
    ×