search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ஆண்டிப்பட்டி அருகே 2 மகள்களை கொன்று தாய் தற்கொலை

    ஆண்டிப்பட்டி அருகே 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள அம்மச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். கொத்தனார். இவரது மனைவி செண்பகவள்ளி (வயது 29). இவர்களுக்கு சுரேனா (10), சுரேஸ்ரீ (7) என்ற 2 மகள்கள் இருந்தனர். செண்பகவள்ளி கடந்த 2 ஆண்டுகளாகவே தீராத வயிற்று வலியால் அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். ஆனாலும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் இருந்தார்.

    இந்தநிலையில் செண்பகவள்ளிக்கு நேற்று மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டது. தாங்க முடியாத வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர் வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக விஷத்தை எடுத்து சாப்பிட முயன்றார். இதற்கிடையே தான் இறந்துவிட்டால் தனது மகள்கள் நிர்கதியாகி விடுவார்கள் என்று எண்ணிய அவர், மகள்களுக்கும் விஷத்தை குடிக்க முடிவு செய்தார்.

    அதன்படி நேற்றிரவு வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் செண்பகவள்ளி தனது மகள்களுக்கு விஷத்தை கொடுத்தார். பின்னர் தானும் விஷத்தை குடித்தார். இதில் 3 பேரும் வீட்டிலேயே அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதற்கிடையே வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த சுரேஷ்குமார், மனைவி மற்றும் மகள்கள் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர், தனது மனைவி மற்றும் மகள்களை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    அங்கு 3 பேரையும் டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது, செண்பகவள்ளி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உயிருக்கு போராடிய சுரேனா மற்றும் சுரேஸ்ரீக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து கண்டமனூர் விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, செண்பகவள்ளி வயிற்று வலி காரணமாக இந்த செயலில் ஈடுபட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    2 மகள்களை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    Next Story
    ×