search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    லாலாபேட்டை அருகே 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை

    லாலாபேட்டை அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்து கொண்டார். விஷம் குடித்த 3 குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    லாலாபேட்டை:

    கரூர் மாவட்டம் லாலாபேட்டையை அடுத்த வீரியபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 29). இந்த தம்பதிக்கு சுபிக்‌ஷா (8), கிஷாந்த் (6), திரிஷா (3) என 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையும் கணவன்-மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் முத்துலட்சுமி மனமுடைந்து காணப்பட்டார். செந்தில்குமார் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்.

    இதையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அரளி விதையை (விஷம்) அரைத்த முத்துலட்சுமி தனது 3 குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு, அவரும் குடித்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்ததை கண்ட குழந்தைகள் கூச்சல் போட்டுக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்து அருகில் உள்ள உறவினர்களிடம் கூறினர்.

    இதையடுத்து உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பதறி அடித்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று பார்த்தனர். பின்னர் முத்துலட்சுமியை மீட்டு முசிறியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், 3 குழந்தைகளையும் குளித்தலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி முத்துலட்சுமி நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக இறந்தார். 3 குழந்தைகளுக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது குழந்தைகள் நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இந்த தற்கொலை சம்பவம் குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் முத்துலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது. கணவருடன் ஏற்பட்ட தகராறில் 3 குழந்தைகளுக்கு அரளி விதையை அரைத்து கொடுத்து, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் லாலாபேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×