search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு புகுந்து கொள்ளை
    X
    வீடு புகுந்து கொள்ளை

    என்ஜினீயர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு

    கம்ப்யூட்டர் என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்களை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    திரு.வி.க நகர்:

    சென்னை முகப்பேர் மேற்கு 4-வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் தனக்கு சொந்தமான வீட்டின் முதல் மாடியில் வசித்து வருகிறார். அந்த வீட்டின் தரைதளத்தில் திருச்சியை சேர்ந்த சுனில் என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார்.

    கம்ப்யூட்டர் என்ஜினீயரான சுனில், ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சுனில், வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் சொந்த ஊரான திருச்சிக்கு சென்றுவிட்டார்.

    நேற்று அதிகாலை சுனில் வீட்டில் சத்தம் கேட்டதால், மாடியில் வசிக்கும் வீட்டின் உரிமையாளரான சம்பத்குமார் கீழே இறங்கி வந்து பார்த்தார். அப்போது சுனில் வீட்டில் இருந்த மர்மநபர்கள் தப்பிஓடிவிட்டனர்.

    இதுபற்றி நொளம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்தில் நடத்திய விசாரணையில் மர்மநபர்கள் சுனில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.7 ஆயிரத்தை திருடிச்சென்றது தெரிந்தது.

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×