search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    சாத்தூர் அருகே ம.தி.மு.க. பிரமுகர் வெட்டிக் கொலை

    சாத்தூர் அருகே ம.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது47). ம.தி.மு.க. நிர்வாகியான இவர் அதே பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வந்தார்.

    இவர் வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த அய்யலுசாமி மகன் மாரிமுத்து(20) என்பவர் அடிக்கடி இரவு வேளையில் மது குடித்து வந்தார். இதனை சிவக்குமார் கண்டித்தார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் சிவகுமார் வீட்டின் அருகே அமர்ந்து மாரிமுத்து மது குடித்தார். இதை பார்த்த சிவகுமார் மாரிமுத்துவை கண்டித்து எச்சரித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து போதையில் அவரை கொலை செய்ய முடிவு செய்தார். தனது வீட்டிற்குச் சென்று அரிவாளை எடுத்துக்கொண்டு சிவக்குமார் வீட்டுக்கு வந்தார். அப்போது சிவக்குமார் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். இதை பார்த்த மாரிமுத்து பின்புறமாக சென்று அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் நிலைகுலைந்த சிவக்குமார் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். சிறிதுநேரத்தில் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் நகர் போலீசார் சிவகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கொலை செய்து தப்பி ஓடிய மாரிமுத்து மீது சாத்தூர் நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அவரை தேடினார்கள். இன்று அதிகாலை மாரிமுத்து போலீஸ் பிடியில் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மது குடித்ததை தட்டிக்கேட்ட ம.தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சாத்தூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×