search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த அடகு கடை
    X
    கொள்ளை நடந்த அடகு கடை

    கும்பகோணம் அருகே அடகு கடை பூட்டை உடைத்து 31 பவுன் தங்கம்-18 கிலோ வெள்ளி கொள்ளை

    கும்பகோணம் அருகே அடகு கடை பூட்டை உடைத்து 31 பவுன் தங்கம் மற்றும் 18 கிலோ வெள்ளியை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்பகோணம்:

    மயிலாடுதுறை பட்டமங்கல தெருவை சேர்ந்தவர் சாந்திலால் (வயது 30). இவர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் அருகே திருலோகி கிராமத்தில் அடகு கடை வைத்துள்ளார். இங்கு தங்கம், வெள்ளி, பித்தளை உள்ளிட்டவைகளை அடகு பிடித்து வந்தார். அடகு கடையில் 2 ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு வேலை முடித்து அடகு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இதையடுத்து நள்ளிரவில் அடகு கடைக்கு வந்த மர்ம நபர்கள் கடையின் இரும்பு கதவின் பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்தனர். அங்கு அடகு பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை அந்த வழியாக நடைபயிற்சி சென்றவர்கள் அடகு கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்துகிடப்பதை கண்டு உடனே கடையின் உரிமையாளர் சாந்திலாலுக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அடகு கடைக்கு வந்த அவர் கடையில் பொருட்கள் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    அப்போது கடையில் அடகு பிடித்து வைக்கப்பட்டிருந்த 31 பவுன் தங்க நகை மற்றும் 18 கிலோ வெள்ளி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், திருப்பனந்தாள் (பொறுப்பு) துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம் தலைமையில் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் ரிச்சர்ட் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பொறுத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமிராவை ஆய்வு செய்தனர்.

    அதனை தொடர்ந்து தஞ்சையில் இருந்து வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர்கள், கடையில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்பநாய் வரவலைக்கப்பட்டு துப்புதுலக்கப்பட்டது.

    இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×