search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா
    X
    சசிகலா

    சசிகலா தீவிர அரசியலில் ஈடுபட்டாலும் தமிழகத்தில் எந்த தாக்கமும் ஏற்படாது- பா.ஜ.க. பொதுச்செயலாளர் பேட்டி

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கைகோர்த்த கட்சிகள் நட்பாகவே உள்ளன. சசிகலா தீவிர அரசியலில் ஈடுபட்டாலும் தமிழகத்தில் எந்த தாக்கமும் ஏற்படாது என்று பா.ஜ.க. பொதுச்செயலாளர் சீனிவாசன் கூறியுள்ளார்.

    திருச்சி:

    மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட பா.ஜ.க. மாவட்ட தலைவர்கள் ஆலோசனை திருச்சி கொள்ளிடம் டோல்கேட்டில் நடந்தது. மதுரை கோட்ட பொறுப்பாளரும், மாநில பொதுச் செயலாளருமான சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக சட்டமன்ற தேர்தல் கொரோனா காரணமாக தள்ளிப்போக வாய்ப்பு இல்லை. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளன. ஆகவே அமைப்பு ரீதியான பணிகளை முடுக்கி விட்டுள்ளோம்.

    பா.ஜ.க.வில் மாற்றுக்கட்சியினர் தனித்தனியாக வந்து இணைந்த காலம் மாறி கூட்டம், கூட்டமாக வரத் தொடங்கியுள்ளனர். அதில் இளைஞர்கள் அதிக அளவு இருக்கிறார்கள். முன்பெல்லாம் தி.மு.க.வில் இருந்து வெளியேறுபவர் அ.தி.மு.க. வுக்கு செல்வார். அ.தி.மு.க.வில் இருந்து விலகுபவர் தி.மு.க.வுக்கு செல்வார். ஆனால் இப்போது இரு தரப்பில் இருந்தும் பா.ஜ.க.வுக்கு வருகிறார்கள்.

    மு.க.ஸ்டாலின் தலைமையில் நம்பிக்கை இல்லாததால் தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்கள் பலர் எங்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் நெருங்கும் போது வருவார்கள்.

    சசிகலா வந்து தீவிர அரசியலில் ஈடுபட்டாலும் தமிழக அரசியலில் எந்த தாக்கமும் ஏற்படாது. 4 ஆண்டுகளால் அ.தி.மு.க.வில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆகவே அவரால் கட்சியை கைப்பற்ற முடியாது. தமிழகத்தில் 60 சட்டமன்ற தொகுதிகளில் பா.ஜ.க. வலுவாக இருக்கிறது என்பதை ஆய்வு செய்து தான் தெரிவித்துள்ளோம். 90 சதவீத வாக்குச்சாவடிகளில் பா.ஜ.க. வலுவாக இருக்கிறது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கைகோர்த்த கட்சிகள் நட்பாகவே உள்ளன. இருந்தாலும் சட்ட மன்ற தேர்தல் நெருங்கும் போதுதான் கூட்டணி பற்றி தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×