search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தொழிலாளி தற்கொலை: வாட்ஸ்-அப்பில் மரண வாக்குமூலம்

    திருப்பூர் அருகே தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பொம்மநாயக்கன் பாளையம் ஜி.என். கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரவி(வயது44). இவர் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி கனகவள்ளி என்ற மனைவியும், 15 வயதில் மகனும், 16 வயதில் மகளும் உள்ளனர்.

    ரவிக்கும், அவரது மனைவி கனகவள்ளிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனகவள்ளி தனது மகன், மகளை அழைத்து கொண்டு மாயமானார்.

    இதுகுறித்து ரவி கொடுத்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கனகவள்ளி ஈரோட்டில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை அழைத்து வந்து சமாதானப்படுத்தி கணவருடன் சேர்த்து வைத்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கனகவள்ளி தனது மகன், மகளை அழைத்து கொண்டு ஈரோட்டில் உள்ள அதே தனியார் விடுதிக்கு சென்று விட்டார்.

    இதையடுத்து ரவி அங்கு சென்று தனது மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்து, ரவியையும், அவரது தாயையும் தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பியுள்ளார்.

    இதனால் ரவி கடந்த சில நாட்களாகவே தனது நண்பர்கள், உறவினர்கள் யாருடனும் பேசாமல் மன வருத்தத்துடன் இருந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த ரவி தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நேற்று காலை ரவியின் வீடு வெகுநேரமாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் ரவி பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்கிருந்த செல்போனை எடுத்து ஆய்வு செய்தனர். அதில் ரவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது வாட்ஸ்-அப்பில் மரண வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்து அதனை தனது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பி இருப்பது தெரியவந்தது.

    மரண வாக்குமூலத்தில் ரவி கூறியிருப்பதாவது:-

    எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். என் மனைவி மற்றும் குழந்தைகள் கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை. என் மனைவியையும், குழந்தைகளையும் பிரிந்து என்னால் ஒரு நாள் கூட இருக்க முடியாது. இதனால் தான், நான் என் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்றாலும் அடிக்கடி சென்று பார்த்து வந்தேன்.

    எனது இந்த நிலைமைக்கு காரணம் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்த அருண் என்கிற அருண்குமார் தான். அவர் என் பெண்ணை காதலிப்பதாக கூறி அவரிடம் பேசி வந்துள்ளார். இது எனக்கு தெரியாது.

    நாளடைவில் எனது மனைவியையும், என் மகளையும் மூளை சலவை செய்து என்னிடம் இருந்து பிரித்து சூரம்பட்டிக்கு அழைத்து சென்று விட்டார். அவருக்கு உதவியாக அவரது அம்மா, அதே பகுதியை சேர்ந்த கோழிக்கடைக்காரர், சூரம்பட்டியை சேர்ந்த ஒரு தனியார் கம்பெனியின் முதலாளி ஆகியோரும் உள்ளனர்.

    இவர்கள் 4 பேரும் சேர்ந்து தான் குருவிக்கூடு போன்று வாழ்ந்து வந்த என் குடும்பத்தை பிரித்து சின்னா பின்னமாக்கி விட்டனர். என் மனைவி, மகள் கெட்டுபோவதை என்னால் பார்க்க முடியாமல் தான் அவரை சென்று பார்த்தேன். ஆனால் அவர் நான், அந்த கம்பெனி முதலாளியை தான் திருமணம் செய்வேன். நீ வேண்டாம் போ என்கிறார். மேலும் என்னையும், எனது தாயையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொச்சைபடுத்தி விட்டார். எனது சாவுக்கு காரணம் அருண் என்கிற அருண்குமார், அவரது தாய், கோழிக்கடைக்காரர், தனியார் கம்பெனி உரிமையாளர் தான்.

    கடந்த 1 மாத காலமாக நான் சாப்பிடாமல், தூங்காமல் அல்லும் பகலும், என் மனைவியையும், குழந்தைகளையும் மீட்க வேண்டும் என போராடி வருகிறேன். ஆனால் இது அவர்களுக்கு புரியவே இல்லை. என் கண்முன்னே எனது மனைவி, மகள் கெட்டுபோவதை பார்க்க விரும்பவில்லை.

    அதனால் தான் நான் இறந்து விடலாம் என முடிவெடுத்துள்ளேன். எனக்கு உதவிய அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு நல்லதம்பி ஆகியோருக்கு ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும் வைக்கிறேன். எப்படியாவது எனது மனைவி மற்றும் மகளை அவர்களிடம் இருந்து மீட்டு திருப்பூருக்கு அழைத்து வந்து மீண்டும் அவர்கள் அங்கு செல்லாதவாறு அறிவுரை கூறி என் மனைவியின் தாயாரிடம் ஒப்படைத்து விடுங்கள். என் மகனை என் அக்கா, தங்கைகள் தாய் போல் பார்த்து கொள்வார்கள்.

    இவ்வாறு அந்த வீடியோவில் உருக்கமாக பேசியுள்ளார்.

    இதையடுத்து போலீசார் அந்த வீடியோவை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×