search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியை பாராட்டி மு.க.ஸ்டாலின் கடிதம்

    தந்தை இறந்த வேதனையிலும் சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியை பாராட்டி மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கடமை உணர்ச்சியின் சிகரமாக திகழ்ந்ததை தமிழகம் போற்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.
    சென்னை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின்போது, தமது தந்தை இறந்துவிட்டார் என அறிந்த பிறகும் கலந்துகொண்டு, கடமையை நிறைவேற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியை பாராட்டி தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரிக்கு அனுப்பிய அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

    கடமை உணர்வின் அடையாளமாக திகழும் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரிக்கு, வணக்கமும் வாழ்த்துகளும். கம்பீரமான காக்கி உடுப்பை அணிந்தபிறகு வீட்டு சூழ்நிலை எப்படி இருந்தாலும், நாட்டு நிலையும், பொதுமக்களின் பாதுகாப்புமே முதன்மையானது என்பதை உணர்ந்து செயலாற்றுபவர்களே சிறப்பான காவல் அதிகாரிகளாக திகழ்கிறார்கள். தமிழக காவல்துறை எத்தனையோ சிறப்பான காவல் அதிகாரிகளை தந்த மாநிலமாக இந்தியாவுக்கு முன்னோடியாக திகழ்ந்துள்ளது.

    அந்தவகையில், உங்களின் தந்தையார் நாராயணசாமி இறந்துவிட்டார் என்ற வேதனை மிகுந்த செய்தியை அறிந்த பிறகும், ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தினத்தில் நிறைவேற்ற வேண்டிய கடமையை நிறைவேற்றும் வகையில் நெல்லை மாவட்ட கலெக்டர் தலைமையிலான கொடியேற்று விழாவில், காவல்துறையின் அணிவகுப்பை சிறப்பாக நடத்தி, வாள் சுழற்றி ‘சல்யூட்’ வைத்து, கடமை உணர்ச்சியின் சிகரமாக திகழ்ந்ததை தமிழகமே போற்றுகிறது.

    பாசத்தைவிட கடமையே முக்கியம் என்பதை காவல்துறையில் தங்களின் கீழ் பணியாற்றும் மற்றவர்களுக்கும், இனி இந்த பணியில் சேர ஆர்வமாக உள்ள தலைமுறையினருக்கும் உணர்த்தியிருக்கிறீர்கள். காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு சிறப்பு துணை ஆய்வாளராக உள்ள தங்கள் கணவரும் குழந்தைகளும் தங்களின் கடமைக்கு துணை நின்றதை அறிந்தபோது மேலும் மதிப்பு கூடியது.

    வேதனையை விழுங்கி கொண்டு தேசத்தின் பெருமைக்குரிய தினத்தின் சிறப்பை போற்றும் வகையில் செயலாற்றிய தங்களுக்கு வணக்கமும் வாழ்த்துகளும் தெரிவித்து, தந்தையாரை இழந்து வாடும் தங்களின் துயரில் பங்கேற்கிறேன். காக்கி சீருடைக்குரிய கம்பீரமான பணிகள் தொடரட்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×