search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    கலசபாக்கம் அருகே பணம் தர மறுத்ததால் மூதாட்டி அடித்துக்கொலை- வாலிபர் கைது

    கலசபாக்கம் அருகே செலவுக்கு பணம் தர மறுத்த மூதாட்டியை அடித்துக் கொலை செய்து, பிணத்தை கிணற்றில் வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கலசபாக்கம்:

    கலசபாக்கம் ஒன்றியம் சீட்டம்பட்டு ஊராட்சி பெரியகல்லந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி மீனாட்சி (வயது 69). கந்தசாமி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதனைத் தொடர்ந்து அவர், வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி திடீரென மீனாட்சி மாயமானதாக அவரது மகன் வெங்கடேசன் கலசபாக்கம் போலீசில் புகார் செய்தார். பின்னர் மீனாட்சி தனது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இறந்து கிடந்த அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பிரேத பரிசோதனையில் மீனாட்சிக்கு தலையில் அடிபட்டு இருந்தது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை செய்தனர். அதில் அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினரான ராஜேஷ்குமாரை (35) சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில், மீனாட்சி ராஜேஷ்குமாருக்கு அத்தையாகும். எனவே அவர், மீனாட்சியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று செலவுக்காக பணம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ்குமார் மீனாட்சியை உருட்டு கட்டையால் தலையில் அடித்துக்கொலை செய்து கழுத்தில் இருந்த 3 பவுன் நகையை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள கிணற்றில், மூதாட்டியின் உடலை வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து ராஜேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×