search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    குன்னம் அருகே மாமியார் குடும்பத்துடன் தகராறில் 3 பேருக்கு கத்திக்குத்து- வாலிபர் கைது

    குன்னம் அருகே மாமியார் குடும்பத்துடன் ஏற்பட்ட தகராறில் 3 பேரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
    குன்னம்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 30). கூலித்தொழிலாளியான இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பேரளி கிராமத்தை சேர்ந்த மஞ்சுளாவின் மகள் மலர்கொடியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் மஞ்சுளா குடும்பத்தினருக்கும், கண்ணன் குடும்பத்தினருக்கும் இடையே விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் கண்ணன், மஞ்சுளா வீட்டிற்கு வந்தார். அங்கு இரவில் கண்ணனுக்கும், மஞ்சுளா குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. முடிவில் கண்ணன் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து, தான் வைத்திருந்த உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை பாப்பாத்தி என்பவரது வீட்டு தோட்டத்தில் தூக்கிப்போட்டுவிட்டு வெளியே சென்று விட்டார். இது குறித்து மஞ்சுளாவின் உறவினரான வரதனின் மகன் பிரபாகரன்(21) மருவத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    இந்நிலையில் வெளியே சென்று வந்த கண்ணன், தான் துப்பாக்கி வைத்திருந்ததை எப்படி போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று கேட்டு மீண்டும் மஞ்சுளாவின் குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த கண்ணன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வரதன்(50), முத்துசாமி(23), விஜயசங்கர்(21) ஆகிய 3 பேரையும் குத்திவிட்டு தப்பி சென்றார்.

    இதுகுறித்து தகவலறிந்த மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுகந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துப்பாக்கியை பறிமுதல் செய்ததோடு, கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த வரதன், முத்துசாமி, விஜயசங்கர் ஆகியோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×