search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    கோவையில் முழு ஊரடங்கில் விபத்து- மகளுடன் ஸ்கூட்டரில் சென்ற தொழிலாளி, கார் மோதி பலி

    கோவையில் முழு ஊரடங்கு அமலில் இருந்த நேற்று, மகளுடன் ஸ்கூட்டரில் சென்ற தொழிலாளி கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கோவை:

    கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 56). தொழிலாளி. இவர் நேற்று காலை தனது மகள் தீபிகாவுடன் (22) ஸ்கூட்டரில் வெளியே சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். ஸ்கூட்டரை தீபிகா ஓட்டினார். அப்போது திருச்சி ரோடு சிங்காநல்லூர் குளம் அருகே ஒரு வளைவில் வலது புறமாக திரும்ப முயன்றார்.

    அப்போது, ராமநாதபுரத்தில் இருந்து சிங்காநல்லூரை நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பரமசிவம், தீபிகா ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த பரமசிவம் ரத்த வெள்ளத்தில் தனது மகள் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்த தகவலின் பேரில் சிங்காநல்லூர் மற்றும் கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், பரமசிவத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தீபிகாவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, காரை ஓட்டி வந்த சிங்காநல்லூரை சேர்ந்த ஓய்வுபெற்ற வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்தன் என்பவரின் மகன் நிரஞ்சன்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்த போது மகளுடன் ஸ்கூட்டரில் சென்ற தொழிலாளி கார் மோதி உயிரிழந்தது கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×