search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்வெட்டுடன் கூடிய கல்தொட்டி கண்டெடுப்பு
    X
    கல்வெட்டுடன் கூடிய கல்தொட்டி கண்டெடுப்பு

    இருநூறு ஆண்டு பழமையானகல்வெட்டுடன் கூடிய கல்தொட்டி கண்டெடுப்பு

    அவினாசி அருகே இருநூறு ஆண்டு பழமையான கல்வெட்டுடன் கூடிய கல்தொட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
    அவினாசி:

    வரலாற்றுச் சுவடுகள் ஆய்வு மையத்தைச் சேர்ந்த தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் முடியரசு மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் அவினாசி அருகே கருவலூரை அடுத்த ராமநாதபுரம் கிராமத்தில் கல்வெட்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்தொட்டி ஒன்றை கண்டெடுத்துள்ளனர்.

    இந்த கல்தொட்டியில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களைக் கண்டறியும் முயற்சியை மேற்கொண்டனர்.

    இது குறித்து முடியரசு கூறியதாவது:-

    கொங்கு மண்டலம் கால்நடை மேய்ச்சல் தொழிலை முக்கியமாக கொண்டது. சாலைகளில் செல்லும் மாட்டுவண்டிகள், சுமை சுமந்து செல்லும் கழுதைகள், தலைமூட்டையுடன் செல்லும் பாதசாரிகள் போன்ற பயணிகள் இளைப்பாற பெரிய நிழல்தரும் மரங்களும் சாலையோரக் கிணறுகளும் சுமைதாங்கிக் கற்களும் கொங்கு மண்டல கிராமங்களில் காணப்படும். பட்டி போட்டு மேய்க்கும் குரும்பை ஆடுகள், காடுகளில் மேய்க்கும் வெள்ளாடுகள், கால்நடைகள் ஆகியனவும் உண்டு.

    இவ்வாறு பலவகையான கால்நடை இனங்களுக்கும் தாகம் தணிக்க கிராமச் சாலையோரப் பொதுக் கிணறுகளின் அருகில் நம் முன்னோர்கள் கல்தொட்டி அமைத்து கால்நடைகளின் தாகம் தீர்க்க ஜீவ காருண்ய சேவை புரிந்துள்ளனர். சேந்து கிணற்றில் நீரைச் சால் அல்லது குடங்களில் மொண்டு கல்தொட்டி நிரப்பப்பட்டு கால்நடைகளுக்குப் பருக வழங்கப்படும்.

    கல்தொட்டியில் உள்ள கல்வெட்டில் பிரமாதி ஆண்டு என ஆரம்பிக்கிறது. பிரமாதி ஆண்டு என்பது 1760, 1820, 1880, 1940 எனும் ஆண்டுகளைக் குறிப்பதாகும். கல்வெட்டின் எழுத்தமைதி மற்றும் தேதி குறிப்பிட்ட முறை கொண்டு 1820 என யூகிக்கப் பெருமளவு வாய்ப்புகள் உண்டு. அதாவது கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள் பழமையானது எனக் கொள்ளலாம். இக்கல் தொட்டியானது 7 அடி நீளமும் 2 அடி அகலமும் ஒன்றே முக்காலடி உயரமும் கொண்டது. இது ஒரு டன் எடைக்கும் அதிகமாக உள்ளது. பக்கவாட்டில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

    இக்கல்வெட்டு மற்றும் கல்தொட்டி குறித்து தொல்லியல் வரலாற்று அறிஞர் பூங்குன்றன் கூறும்போது“ நாயக்கர்கள் ஆட்சிக்குப் பிறகு அதாவது இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கல்தொட்டிகள் அமைக்கும் பழக்கம் வந்திருக்க வேண்டும். கொங்கு மண்டலத்தில் இக் கல்தொட்டிகள் கல்லுப் பண்ணைகள் என்றழைக் கப்பட்டன” என்றார்.

    வீரக் கல், சதிக் கல், அரிகண்டம், நவ கண்டம் போன்ற வீரம் செறிந்த நிகழ்வுகளைக் கடந்து சுமைதாங்கிக் கல், அன்னசத்திரம், கால்நடைகளுக்குத் தாகம் தீர்க்கும் கல்தொட்டி, ஊர்ப் பொதுக் கிணறு போன்ற மனித நேயமிக்க செயல்களைப் பிற்காலக் கொங்கு வரலாற்றில் அறியமுடிகிறது என வரலாற்று ஆய்வாளர் முடியரசு கூறினார்.
    Next Story
    ×