search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருமணம் செய்வதாக ஏமாற்றி கர்ப்பமாக்கியதால் சிறுமி தற்கொலை- வாலிபர் கைது

    திருமணம் செய்வதாக ஏமாற்றி உறவினர் தன்னை கர்ப்பமாக்கியதால், சிறுமி விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    வையம்பட்டி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வி.பெரியபட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு 17 வயதில் ஒரு மகள் இருந்தாள். அந்த சிறுமியை புதுக்கோட்டை மாவட்டம் நம்பம்பட்டி அருகே உள்ள பகவான்பட்டியை சேர்ந்த ராம்கி(வயது 22) திருமணம் செய்து கொள்வதாக கூறி, பலமுறை உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி 6 மாதம் கர்ப்பமானார்.

    இதுபற்றி ராம்கியிடம் கூறிய சிறுமி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். ஆனால் அவர் சிறுமியை திருமணம் செய்ய மறுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ராம்கி மீது மணப்பாறை அனைத்து மகளிர் போலீசார் கடந்த 29-ந்தேதி போக்சோ சட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் ராம்கி முன்ஜாமீன் பெற்று இருந்ததால் போலீசார் அவரை கைது செய்யவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோருடன் பலமுறை மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்து ராம்கி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். மேலும் ராம்கி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 6-ந்தேதி தனது பெற்றோருடன் வந்து மகளிர் போலீஸ் நிலையம் முன் அமர்ந்து சிறுமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமரசம் செய்து அனுப்பிவைத்தார்.

    இந்நிலையில் நேற்று காலையும் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு செல்ல சிறுமியின் பெற்றோர் தயாராக இருந்தனர். அப்போது, சிறுமி வாயில் இருந்து நுரை தள்ளி மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியை மீட்டு மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில் அவர் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தனது மகளை ஏமாற்றி கர்ப்பமாக்கி, தற்கொலைக்கு தூண்டியதாக ராம்கி மீது சிறுமியின் தாயார் வையம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில், ராம்கி மீது சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாகவும், பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழும் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் நேற்று இரவு ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×