search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கப்பலில் வந்த ஒரு குழந்தைக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை
    X
    கப்பலில் வந்த ஒரு குழந்தைக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை

    இலங்கையில் இருந்து கடற்படை கப்பலில் 713 இந்தியர்கள் தூத்துக்குடி வந்தனர்

    இலங்கையில் தவித்த 713 இந்தியர்கள், கடற்படை கப்பலில் நேற்று காலை தூத்துக்குடி வந்தனர். இங்கிருந்து மாவட்ட வாரியாக அவர்கள் பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
    தூத்துக்குடி:

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். மேலும் சுற்றுலாவுக்கும் சென்று வருகின்றனர்.

    ஊரடங்கால் வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாவுக்கு சென்றவர்கள், இந்தியாவுக்கு திரும்பி வர முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, அவர்களை மீட்பதற்காக மத்திய அரசு ‘வந்தே பாரத்’ இயக்கத்தை நடத்தி வருகிறது.

    இதன்மூலம் பல்வேறு நாடுகளில் சிக்கி தவித்து வரும் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதற்காக பல்வேறு நாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி, இலங்கையில் தவித்து வரும் இந்தியர்கள் சுமார் 1,200 பேர் இந்தியாவுக்கு திரும்புவதற்காக, இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்து உள்ளனர். அவர்களை மீட்டு வருவதற்காக “ஆபரேசன் சமுத்திர சேது“ திட்டத்தின்கீழ், இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ். ஜலஸ்வா, இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்பட்டது.

    கொழும்புவில் இருந்து நேற்று முன்தினம் மாலையில் 713 இந்தியர்களுடன் புறப்பட்ட ஐ.என்.எஸ். ஜலஸ்வா கப்பல் நேற்று காலை 8 மணி அளவில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை வந்தடைந்தது.

    இந்த கப்பலில் விருதுநகரைச் சேர்ந்த 175 பேர், திண்டுக்கல்லைச் சேர்ந்த 75 பேர், மதுரையைச் சேர்ந்த 60 பேர், தூத்துக்குடியைச் சேர்ந்த 58 பேர், ராமநாதபுரத்தைச் சேர்ந்த 49 பேர், சென்னையைச் சேர்ந்த 42 பேர், தேனி, சிவகங்கையைச் சேர்ந்த தலா 39 பேர் உள்பட 34 மாவட்டங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வந்தனர்.

    வ.உ.சி. துறைமுகத்தின் கரித்தளத்தில் நிறுத்தப்பட்ட ஐ.என்.எஸ். ஜலஸ்வா கப்பலில் இருந்து 713 பயணிகள் இறக்கப்பட்டனர். அவர்களை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.

    அப்போது முழுகவச உடையுடன் தயார் நிலையில் இருந்த போலீசார் மற்றும் சுகாதார பணியாளர்கள், பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் பயணிகளின் உடைமைகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    அதன்பிறகு அவர்கள் பஸ்கள் மூலம் பயணிகள் முனையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு மாவட்டம் வாரியாக அனைவரும் பிரித்து அமர வைக்கப்பட்டனர். அவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட விவரங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது பயணிகள் அனைவரும் உரிய சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையாக நின்றனர்.

    பரிசோதனை முடிந்த பிறகு ஒவ்வொரு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள், அவர்களுக்கென ஒதுக்கப்பட்டு இருந்த பஸ்களில் அமர்ந்தனர். மொத்தம் 25 பஸ்களில் பயணிகள் புறப்பட தயாரானார்கள். அனைத்து பயணிகளுக்கும் உணவு, குடிநீர் வழங்கப்பட்டது.

    ஒவ்வொரு பஸ்சிலும் ஒரு வருவாய்த்துறை அதிகாரி மேற்பார்வையில், பயணிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பால கோபாலன், மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், கூடுதல் கலெக்டர்(வருவாய்) விஷ்ணு சந்திரன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக துணை தலைவர் பிமல்குமார்ஜா, முதன்மை பொறியாளர் ரவிகுமார், மாநகராட்சி செயற்பொறியாளர் பார்த்தீபன், மாநகர நல அலுவலர் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-

    கடந்த 2 மாதங்களாக இலங்கையில் தவித்த இந்தியர்கள் கடற்படை கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர். கப்பலில் இருந்து இறங்கியதும் பயணிகளுக்கு உடனடியாக தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் நோய் தொற்று அறிகுறி உள்ள நபர்களை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று, கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. கொரோனா தொற்று இல்லாதவர்களுக்கு குடியுரிமை மற்றும் உடைமை சோதனைகளை செய்து, மாவட்டம் வாரியாக பிரித்து பஸ்களில் அவர்களது மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

    பயணிகளின் வருகையை முன்னிட்டு, ஏற்கனவே அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு பயணிகளின் பெயர் விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. பயணிகள் அவர்களது மாவட்டங்களுக்கு சென்றடைந்தவுடன், அரசு தெரிவித்து உள்ள விதிகளின்படி, கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

    பரிசோதனை முடிவில் கொரோனா இல்லாத நபர்கள், வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இலங்கையில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 58 பயணிகளும் கப்பலில் வந்து உள்ளனர். அனைத்து பயணிகளுக்கும் உணவு, குடிநீர் வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×