search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மதுரவாயலில் ஏ.டி.எம்.மில் கொள்ளையடித்த வங்கி ஊழியர் கைது

    மதுரவாயலில் தனியார் வங்கி ஏ.டி.எம்.மில் கிருமி நாசினி தெளிப்பதாக கூறி ஏ.டி.எம். எந்திரத்தை திறந்து பணத்தை கொள்ளையடித்து சென்ற வழக்கில் அந்த வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார். கடன் சுமை அதிகமானதால் கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது.
    பூந்தமல்லி:

    சென்னை மதுரவாயல், எம்.எம்.டி.ஏ. காலனி பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஆட்டோவில் வந்த மர்மநபர், ஏ.டி.எம். மையத்தின் உள்ளே கிருமி நாசினி மருந்து தெளிப்பதாக கூறி உள்ளே சென்று, ஏ.டி.எம். எந்திரத்தை சாவி போட்டு திறந்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றார்.

    பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்இன்ஸ்பெக்டர்கள் சுதாகர், கோபால் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

    அதில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் முகத்தை துணியால் மூடியும், தலையில் தொப்பி அணிந்தும் இருந்ததால் சரியாக அடையாளம் தெரியவில்லை. ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்காமல் சாவி போட்டு திறந்து பணத்தை கொள்ளையடித்ததால் வங்கியில் பணிபுரிபவர்களே இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் அடைந்த போலீசார், வங்கியில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் வங்கி ஊழியர்களிடம் காண்பித்து போலீசார் விசாரித்தனர். அந்த காட்சிகளை பார்த்த வங்கி ஊழியர்கள், அது ஏற்கனவே இந்த வங்கி கிளையில் பணிபுரிந்த சிவானந்தன்(வயது 36) என்பவர் போல் இருப்பதாகவும், தற்போது அவர் அம்பத்தூர் வங்கி கிளையில் பணிபுரிவதாகவும் தெரிவித்தனர்.

    உடனடியாக மதுரவாயல் போலீசார், அம்பத்தூர் வங்கி கிளைக்கு சென்று சிவானந்தனிடம் விசாரித்தனர். முதலில் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறிய அவர், பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணத்தை கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளையடித்த பணத்தை மேற்கு மாம்பலத்தில் உள்ள தனது வீட்டில் பதுக்கி வைத்து இருப்பதாகவும் தெரிவித்தனர். அவரது வீட்டுக்கு சென்ற போலீசார், அங்கு பதுக்கி வைத்து இருந்த ரூ.8 லட்சத்து 62 ஆயிரத்து 900 பணத்தை மீட்டனர்.

    மேலும் போலீசாரிடம் சிவானந்தன் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

    எனது மனைவி தலைமைச்செயலகத்தில் பணிபுரிந்து வருகிறார். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நாங்கள், தற்போது தூத்துக்குடியில் புதிதாக வீடு கட்டி உள்ளோம். அதற்காக கடன் வாங்கியதில் ரூ.10 லட்சம் வரை கடன் உள்ளது. இந்த கடனை அடைக்க வேண்டும். இல்லை என்றால் வீட்டை விற்றுவிட வேண்டும் என்ற நிலையில் இருந்தேன். கடன் சுமை அதிகமானதால் மனம் உடைந்து போன நான், பணத்துக்கு என்ன செய்வது? என தவித்து வந்தேன்.

    ஏற்கனவே நான், மதுரவாயல் வங்கி கிளையில் கிளர்க்காக இருந்ததால் நான்தான் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்புவேன். அதன்பிறகு பணிமாறுதல் ஆகி அம்பத்தூர் வங்கி கிளைக்கு வந்து விட்டேன். ஆனாலும் ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள ரகசிய குறியீட்டு எண்ணை மாற்றாமல் இருந்தனர். இதனை தெரிந்துகொண்ட நான், நேற்று முன்தினம் ஆட்டோவில் ஏ.டி.எம். மையத்துக்கு சென்று கிருமி நாசினி தெளிக்க போவதாக காவலாளியிடம் கூறினேன். பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை கள்ளச்சாவி போட்டு திறந்து ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்தேன். அந்த பணத்தை வீட்டுக்கு எடுத்து சென்று பதுக்கி வைத்தேன். பின்னர் எதுவும் தெரியாததுபோல் நேற்று வேலைக்கு சென்றுவிட்டேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த வழக்கில் முதலில் ரூ.13 லட்சம் கொள்ளை போனதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தில் பரிசோதனை செய்தபோது ரூ.8 லட்சத்து 62 ஆயிரத்து 900 மட்டுமே கொள்ளை போனது உறுதியானது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக பொதுமக்களின் பணத்தை பாதுகாக்க வேண்டிய வங்கி ஊழியரே ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    Next Story
    ×