search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை ஐகோர்ட்
    X
    மதுரை ஐகோர்ட்

    தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணம் பயன்படுத்துவதை கண்காணியுங்கள்- மதுரை ஐகோர்ட் உத்தரவு

    தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்துவதை கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    மதுரை:

    கன்னியாகுமரி மாவட்டம் லூயி தூய்மை தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் சுலிப், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் எங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அரசு மருத்துவமனை, பேரூராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு முக கவசம், கை உறைகள், கிருமிநாசினி போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை. இதனால் இவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, தூய்மை பணியாளர்களுக்கு ஆயுள் காப்பீட்டு செய்ய வேண்டும்.

    இவற்றை முறையாக வழங்கும்படி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களையும், ஆயுள் காப்பீட்டையும் முறையாக வழங்க உத்தரவிட வேண்டும். தூய்மை பணியாளர்களை அந்தந்த மாவட்ட நிர்வாகம் கண்காணிக்கவும் வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். அவற்றை அவர்கள் அனைவரும் முறையாக முக கவசம், கை உறைகளை பயன்படுத்த வேண்டும். இதை அதிகாரிகள் உறுதி செய்வதுடன், தினந்தோறும் தூய்மை பணியாளர்களை அவர்களின் மேற்பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும்.

    தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த தவறினால், அதுகுறித்து புகைப்படங்களை எடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்கறி சந்தை, மீன் சந்தைகளில் அதிக அளவில் குப்பை சேரும் இடங்களில் தூய்மை பணியாளர்கள் கட்டாயம் நீளமான ‘ஷூ‘ பயன்படுத்த வேண்டும். அதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

    மேலும் இந்த நடைமுறையை மதுரை மாநகராட்சி மற்றும் மதுரை ஐகோர்ட்டு எல்லைக்கு உட்பட்ட மாவட்டங்களில் பின்பற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    வழக்கு விசாரணையை வருகிற 8-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
    Next Story
    ×