search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிகாட்சி மூலமாக அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.
    X
    மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிகாட்சி மூலமாக அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    மக்களுக்கு மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்- அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

    கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு ரூ.7,500-ம், மாநில அரசு ரூ.5 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நேற்று நடந்தது. காணொலிக்காட்சி மூலமாக நடந்த இந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்கு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் மத்திய தொகுப்புக்கு தமிழக அரசு ஒப்படைக்கும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களில், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை எந்தவித குறைப்பாடும் இன்றி மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

    இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு சட்ட போராட்டத்தினை ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடங்கியுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளையும், பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களையும் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்திடும் சூழலை மத்திய அரசு ஏற்படுத்தவேண்டாம் என்று அனைத்து கட்சிக்கூட்டம் எச்சரிக்கிறது.

    * கொரோனா நோய் குறித்து மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் முன்கூட்டியே தெரிந்திருந்தும், அரசியல் காரணங்களுக்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய காலத்தில் மேற்கொள்ளாமல் நாட்டு மக்களை பெரும் பாதிப்பிலும், துன்ப துயரங்களிலும் ஆழ்த்தியதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். அதிகரித்து வரும் கொரோனாவை தடுக்கும் எந்தவித ஆக்கபூர்வமான பாதுகாப்பு திட்டங்களும் இன்றி மொத்தமாக தளர்த்தி பெயரளவுக்கு ஜூன் 30-ந்தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது வேதனைக்குரியது.

    ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் தலா ரூ.7 ஆயிரத்து 500-ம், மாநில அரசின் சார்பில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும்.

    * மாநில உரிமைகளை கையகப்படுத்திக்கொள்ளவும், விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தையும், வழிபாட்டு தலங்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கான கட்டண சலுகைகளை ரத்து செய்யவும் கொண்டுவரப்படும் புதிய மின்சார சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்.

    * கொரோனா பேரிடரில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றும் மிக முக்கிய பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், போலீசார் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் ஆற்றி வரும் தன்னலமற்ற சேவைக்கும், இரவு பகல் என்று பாராது உழைத்து வருவதற்கும் மனமுவந்த பாராட்டுதலை தெரிவித்துக்கொள்கிறோம். ஊரடங்கு காலத்தில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிய தமிழக மக்களுக்கும் நன்றி. இனி வரும் நாட்களிலும் அரசின் சுகாதார அறிவுரைகளுக்கு மதிப்பளித்து கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து கொரோனா நோய் தொற்றிற்கு எதிரான போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடிகளாக விளங்கவேண்டும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×