search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    சென்னை உள்பட 11 நகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு

    சென்னை உள்பட 11 நகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதுடன் பல புதிய கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
    சென்னை:

    இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதையடுத்து அதை கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் மாதம் 24-ந்தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

    இந்த ஊரடங்கு 4 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 31-ந்தேதி ஊரடங்கு முடிவுக்கு வருகிறது.

    ஆனால் ஊடரங்கு அமலுக்கு வந்து 2 மாதம் கடந்துவிட்ட நிலையிலும் நோய் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. தொடர்ந்து நோய் பரவுதல் அதிகரித்து வருகிறது.

    தற்போது 1 லட்சத்து 51 ஆயிரத்து 761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்து 337 பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த 14 நாட்களில் நோய் தாக்குதல் இருமடங்காக உயர்ந்துள்ளது. அதேபோல கடந்த 16 நாட்களில் இறப்பு விகிதம் 2 மடங்காகி இருக்கிறது.

    பெரும்பாலான மாநிலங்களில் தொடர்ந்து நோய் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது.

    நிலைமை இப்படி இருப்பதால் ஊரடங்கை உடனடியாக வாபஸ்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே 5-வது கட்டமாக ஊரடங்கை நீட்டிக்கலாமா? என்பது குறித்து பிரதமர் அலுவலகம் விரிவாக ஆலோசனை நடத்தி வருகிறது.

    பிரதமர் மோடி

    4-வது தடவை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோது பிரதமர் நரேந்திரமோடி அனைத்து முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை கேட்டார். அவர்கள் விடுத்த கோரிக்கைபடி பல்வேறு தளர்வுகளையும் அறிவித்தார்.

    வாகன இயக்கம், தொழிற்சாலைகள் திறப்பு, கடைகள் திறப்பு போன்றவை சம்பந்தமாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. பெரும்பாலான தளர்வுகள் குறித்து மாநில அரசுகளே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என அனுமதிக்கப்பட்டது.

    ஊரடங்கால் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கும் கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்வதற்கு மீண்டும் பல தளர்வுகளை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே 5-வது முறை ஊரடங்கு நீட்டிக்கும்பட்சத்தில் பல்வேறு விதமான தளர்வுகளையும் அறிவிக்க திட்டமிட்டுள்ளனர். இது சம்பந்தமாக மத்திய உள்துறை விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் பிரதமர் அலுவலகம் ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளது. மத்திய அரசு அதிகாரிகள் மட்டத்தில் வந்த தகவல்படி ஊரடங்கு இன்னும் 2 வார காலத்திற்கு நீட்டிக்கப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.

    நோய் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகளை தொடர்வதுடன் மேலும் வலுவான சில கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவை பொறுத்தவரை 11 நகரங்கள் தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள மொத்த நோயாளிகளில் 70 சதவீதம் பேர் இந்த 11 நகரங்களில் உள்ளனர்.

    சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா போன்ற நகரங்களும் இதில் அடங்கும். 11 நகரங்களிலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதுடன் பல புதிய கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

    மற்ற இடங்களில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. குறிப்பாக வழிபாட்டு தலங்கள் திறக்கும் அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கர்நாடகாவில் ஜூன் 1-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார். இதன் அடிப்படையில் எல்லா மாநிலங்களிலும் வழிபாட்டு தலங்களை திறப்பதற்கு அனுமதிக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் மட்டத்தில் கூறினார்கள்.

    ஆனால் அங்கு சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருக்கிறது. அதே நேரத்தில் கோவில் திருவிழாக்கள் போன்றவற்றை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது தொடரும்.

    மால்கள், சினிமா தியேட்டர்கள், பள்ளி-கல்லூரிகள் இப்போது திறப்பதற்கான வாய்ப்பு இல்லை. அதில் 5-வது கட்ட ஊரடங்கு முடிந்த பிறகு உரிய முடிவுகள் எடுக்கப்படும்.

    கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததால் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது. வழக்கமாக சுகாதார விவகாரங்கள் மாநில அரசு சம்பந்தப்பட்டது.

    தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் அமல்படுத்தப்பட்டதால் மத்திய அரசு அந்த அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டது. இந்த சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதா? அல்லது சுகாதார முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே கொடுக்கும் வகையில் சட்டத்தை திரும்ப பெறுவதா? என்பது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

    2 மாதம் ஊரடங்கு நீட்டித்த பிறகும் நோய் கட்டுப்பாட்டுக்குள் வராதது இப்போது விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பல அரசியல் தலைவர்களும், மாநில முதல்-மந்திரிகளும் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

    மேலும், இடம் பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை, அவர்களால் நோய் பரவுதல் போன்றவை பெரும் சிக்கலை உருவாக்கி உள்ளது. குறிப்பாக பீகார், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா போன்ற மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்களால் கடந்த சில நாட்களில் நோய் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

    மேலும் வெளிமாநிலத்தில் இருந்து வரும் நபர்களை அவர்கள் தனிமைப்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு பல லட்சம் பேரை தனிமைப்படுத்துவது மாநிலங்களுக்கு பெரும் சுமையாக இருக்கிறது.

    சிறப்பு ரெயில்கள் மற்றும் பஸ்கள் மூலம் சுமார் 35 லட்சம் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு மாற்று வேலை கொடுத்தாக வேண்டிய நிலை உள்ளது. மேலும் அவர்களால் நோய் பரவாமல் தடுக்க வேண்டியது உள்ளது.

    இது சம்பந்தமாகவும் மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.
    Next Story
    ×