search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    கால்வாய் தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் - தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

    மேட்டூர் அணையை திறக்க 18 நாட்களே இருக்கின்ற நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விவசாயிகளின் மேம்பாட்டுக்காகவும், தமிழ்நாட்டின் வேளாண் தொழில் வளர்ச்சிக்காகவும், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் முன்னோடியாகத் தமிழ்நாட்டில்தான் தி.மு.க. ஆட்சியில், தொலைநோக்குத் திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டு, விவசாயிகளுக்கு உதவும் கரங்களாக விளங்கியது. ஆனால் இன்றைக்கு தும்பைவிட்டு வாலைப்பிடிப்பது போல், ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று அறிவித்துவிட்டு, இப்போது தூர்வாரும் பணிகளை அறிவித்திருக்கிறது அ.தி.மு.க. அரசு.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு ஜூன் மாதத்தில் அணை திறக்கப்படும், அதற்குரிய நீர் இருப்பு அணையில் இருக்கிறது என்பது இந்த அரசுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தும், அதுபற்றி பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ளவும் இல்லை; கவலைப்படவும் இல்லை.

    இந்நிலையில் காவிரி டெல்டா பகுதி வேளாண்மைக்கான நீர்ப்பாசனத்திற்கு மிக முக்கியமான கால்வாய் தூர்வாரும் பணிகளை அறிவித்து, அந்தப் பணிகளைக் கண்காணிக்கச் சிறப்பு அதிகாரிகளையும் நியமித்திருக்கிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அணை திறக்க இன்னும் 18 நாட்கள் மட்டுமே இருக்கின்ற நிலையில், அதற்குள் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள கால்வாய்கள் அனைத்தையும் தூர்வாரி விடுவார்களா?.

    மேட்டூரில் ஜூன் 12-ந்தேதி திறக்கப்படும் நீர் கடைமடைப் பகுதிக்கும் சென்றடையுமா? என்பதெல்லாம் மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது. துறை அமைச்சரின் அலட்சியம் அணையில் இருந்து வரும் காவிரி நீரும் விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்குமா என்பது “பதில்” தெரியாத புதிராகவே இப்போது வரை இருக்கிறது.

    ஆகவே காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    வழக்கம் போல் அதிகாரிகளை நியமித்து, அவர்களிடம் இருந்து ஆய்வு அறிக்கைகள் பெற்று, தூர்வாரும் பணிகள் அமோகமாக நடந்துவிட்டது போன்ற கற்பனைத் தோற்றத்தை உருவாக்கி கணக்குக் காட்ட முயற்சிக்காமல், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய சங்கப் பிரதிநிதிகளையும் கண்காணிப்புக்குழுவில் இடம் பெறச் செய்து; கால்வாய் தூர் வாரும் பணிகளில் எவ்வித முறைகேட்டுக்கும் இடம் தராமல் வெளிப்படையாகவும், வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் குறுவை சாகுபடிக்கு உண்மையிலேயே கடைமடை வரை தங்கு தடையின்றி, பயன்பட்டிடும் வகையில் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×