search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மோட்டார் சைக்கிள் மீது காரை மோதவிட்டு ரவுடி படுகொலை - பரபரப்பு தகவல்கள்

    அவனியாபுரத்தில் மோட்டார் சைக்கிளில் காரை மோதவிட்டு ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அவனியாபுரம்:

    மதுரை அவனியாபுரம் வைகை தெரு, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ் என்கிற சுப்பிரமணியம் (வயது 26). இவர் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் வெள்ளக்கல் திருப்பரங்குன்றம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே வேகமாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சுப்பிரமணியம் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    அந்த சமயம் காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல் சுப்பிரமணியனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. மேலும் இரும்பு கம்பியாலும் தாக்கியது. இதில் ரத்த வெள்ளத்தில் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரை வெட்டிக் கொன்ற கும்பல் தாங்கள் வந்த காரில் தப்பி சென்று விட்டது.

    இதுபற்றி அறிந்த அவனியாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுப்பிரமணியன் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ரோஜா வரவழைக்கப்பட்டது. அந்த நாய் புல்வெளியில்சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கொலையுண்ட சுப்பிரமணியன் டிப்ளமோ பட்டப்படிப்பு முடித்துவிட்டு அங்கு உள்ள ஒரு பைனான்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தாய் ராணியுடன் வசித்து வந்தார்.

    சுப்பிரமணியனுக்கு அதே பகுதியை சேர்ந்த சிலருடன் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.

    சுப்பிரமணியன் மீது அவனியாபுரம், திருப்பரங்குன்றம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    திருப்பரங்குன்றத்தை சேர்ந்த மாரி என்பவரை கடந்த 2018-ம் ஆண்டு மும்பை நண்பர் சரணுடன் சேர்ந்து வெட்டியதாக ஒரு வழக்கு, போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இதற்காக அவர் ஜெயிலுக்கு சென்றார் அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்த அவர் மும்பைக்கு சென்று விட்டார்.

    மதுரை அவனியாபுரத்துக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திரும்பி வந்து, பைனான்ஸ் கடையில் வேலை பார்த்தார்.

    சுப்பிரமணியனை கொலை செய்ய ஏற்கனவே ஒரு கும்பல், கடந்த 2 நாட்களுக்கு முன்பு முயற்சி செய்தது.

    மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த மணி, சோனா மற்றும் சோபன் ஆகிய 3 பேரும் ராஜீவ் காந்தி நகர் அருகே சுப்பிரமணியனை கடந்த 2 நாட்களுக்கு முன்பு கத்தியால் வெட்டி கொல்ல முயற்சி செய்தனர். இதில் அவர் உயிர் தப்பினார்.

    இது தொடர்பாக சுப்பிரமணியன், தாயிடம் சொல்லி புலம்பி வந்தார்.

    மேலும் “திருப்பரங்குன்றம் மாரி கும்பல் என்னை கொல்ல திட்டம் தீட்டி விட்டது. அதற்கு முன்பாக நான் அவர்களை கொல்ல வேண்டும். இல்லை எனில் அவர்கள் என்னை தீர்த்து கட்டி விடுவார்கள்” என்று தாயிடம் கூறினார்.

    இதுதொடர்பாக சுப்பிரமணியம் செல்போனில் யாருடனோ நீண்ட நேரமாக பேசினார். அப்போது அவர் கடும் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தான் சுப்பிரமணியன் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். அவர் யாருடன் செல்போனில் பேசினார் என்பது தெரியவில்லை.

    சம்பவம் நடந்த நேற்று திருப்பரங்குன்றத்தை சேர்ந்த மாரி, தனது காரில் தங்கபாண்டி மற்றும் ரவி உள்பட சிலருடன் வந்து உள்ளார்.

    அப்போது வெள்ளக்கல் சுத்திகரிப்பு நிலையம் அருகே பைக்கில் சென்றுகொண்டு இருந்த சுப்பிரமணியனை கார் மோதி கீழே தள்ளி விட்டு கொன்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ், சப்இன்ஸ்பெக்டர் ஆதி குண்டகண்ணன் அடங்கிய தனிப்படையினர், சுப்பிரமணியனை வெட்டிக் கொன்ற 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    சுப்பிரமணியனின் தந்தை ஆனந்த மூர்த்தி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். சுப்பிரமணியனின் சகோதரர் இருளப்பன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் சுப்பிரமணியனும் கொல்லப்பட்டு உள்ளார். இதனால் அவரது தாய் ராணி நிர்க்கதியாக நடுத்தெருவில் நிற்கும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

    மதுரை அவனியாபுரத்தில் பழிக்குப்பழியாக அரங்கேறியுள்ள இந்த கொலை பொதுமக்கள் மத்தியில் பதட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×