search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் வேலுமணி
    X
    அமைச்சர் வேலுமணி

    கோவை மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள், கடைகள் நாளை முதல் திறக்கப்படும்- அமைச்சர் வேலுமணி தகவல்

    கோவை மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள், கடைகள் நாளை (புதன்கிழமை) முதல் திறக்கப்படும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
    கோவை:

    கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கொரோனா தாக்கம் குறைந்த பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ளது. அதன் அடிப்படையில் திறக்கப்பட வேண்டிய தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். கலெக்டர் ராஜாமணி முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு தொழில் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதலின்படி கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வைரஸ் தொற்று பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இப்பணியில் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.

    கொரோனா பரவலை தடுக்க தமிழ்நாட்டில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அரசு அறிவித்துள்ள சில தளர்வுகளின் அடிப்படையில் தொழில் நிறுவனங்களை இயக்க அனுமதிப்பது என அறிவிக்கப்பட்டு உள்ளன.

    கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு,குறு மற்றும் நடுத்தர, பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தொழில் நிறுவனங்களில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் 40 சதவீத தொழிலாளர்கள் அந்தந்த தொழிற்சாலை வளாகத்திலேயே தங்கியுள்ளனர்.

    பவுண்டரி, டெக்ஸ்டைல்ஸ், விசைத்தறி, வெட்கிரைண்டர்ஸ், பம்புகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் என சுமார் 60 சதவீதம் தொழிற்சாலைகள் கிராமப்புறங்களிலும், 40 சதவீதம் தொழிற்சாலைகள் நகர்புறங்களிலும் செயல்படுகின்றன. இதில் கிராமப்புறங்களை சுற்றி சுமார் 325 பெரிய தொழில்நிறுவனங்களும், மாநகராட்சி பகுதிகளை சுற்றி சுமார் 100 பெரிய தொழில்நிறுவனங்களும் உள்ளன.

    திறக்கப்படும் தொழில் நிறுவனங்கள்

    * கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் அமைந்துள்ள 706 ஸ்பின்னிங், 5,200 விசைத்தறி, 220 தானியங்கி தறி உள்பட மொத்தம் 6,120 ஜவுளி தொழில் நிறுவனங்கள் சுமார் 50 சதவீதம் பணியாளர்களைக் கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி செயல்படலாம்.

    * பவுண்டரி துறையில் சுமார் 500 தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவை குறைந்தபட்சம் 50 சதவீத பணியாளர்களை கொண்டு உரிய சமூக இடைவெளியை பின்பற்றி செயல்படலாம்.

    * வெட் கிரைண்டர்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் குறைந்தபட்சம் 50 சதவீதம் பணியாளர்களை கொண்டு செயல்படலாம்.

    * விவசாயத்திற்கு மிக முக்கிய பங்கு வகிக்கும் பம்புகள் தயாரிக்கும் தொழில்நிறுவனங்கள் செயல்படும்.

    * மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள, அதாவது ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளில் அனைத்து தொழிற்சாலைகள் (ஜவுளித்துறை உள்பட) 50 சதவீத பணியாளர்களை கொண்டு (குறைந்தபட்சம் 20 நபர்கள்) செயல்பட அனுமதிக்கப்படும்.

    * 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் மட்டும், மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, சூழ்நிலைக்கேற்ப, ஜவுளித்துறை நிறுவனங்களை 50 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.

    * தொழிற்பேட்டைகள் (ஊரக, நகரம்) 50 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கலாம்.

    ஏற்றுமதி நிறுவனங்கள்

    * நகரப்பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து சூழ்நிலைக்கேற்ப 50 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.

    * கிராமப்புறங்களில் உள்ள ஒருங்கிணைந்த நூற்பாலைகள் தக்க சமூக இடைவெளியுடன் 50 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.

    * நகரப்பகுதிகளில் உள்ள தோல் பொருட்கள் மற்றும் ஆடை ஏற்றுமதிக்கான டிசைனிங் மற்றும் சாம்பிள்கள் உருவாக்கம் ஆகியவற்றிற்கு மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, 30 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.

    * தகவல் தொழில்நுட்பம் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்கள், குறைந்தபட்சம் 20 நபர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.

    * நகர்புறங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பணியிடத்திலேயே பணியாளர்கள் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படும். பணியாளர்களை ஒருமுறை மட்டும் வேறு இடத்தில் இருந்து அழைத்துவர அனுமதிக்கப்படும்.

    அனுமதி இல்லை

    * தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்தவொரு தொழிலும் தொடங்க அனுமதிக்கப்பட மாட்டாது.

    * நகரப் பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளில், ஜவுளித்துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை.

    வேளாண் தொழில்கள்

    ஏற்கனவே அரசால் அனுமதிக்கப்பட்ட வேளாண்மை பணிகள், வேளாண் சார்ந்த தொழில்கள் மற்றும் வணிக செயல்பாடுகளும், மருத்துவப் பணிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகள், வங்கிகள், அம்மா உணவகங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவை எவ்வித தங்குதடையின்றி தொடர்ந்து முழுமையாக செயல்படலாம்.

    அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். பிளம்பர், எலக்ட்ரிசியன், ஏ.சி.மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள் அனைவரும் மாவட்ட கலெக்டரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னர் அனுமதிக்கப்படுவர். அச்சகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

    கட்டுமானப் பணிகளுக்கு தேவையான ஹார்டுவேர், சிமெண்டு, கட்டுமானப் பொருட்கள், மின் சாதன விற்பனைக் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல எவ்வித தடையும் இல்லை.

    அனைத்து மாவட்ட பகுதிகள், மாநகராட்சி பகுதிகளில் அரசால் அறிவுறுத்தப்பட்ட தனிநபர் இடைவெளியினை பின்பற்றியும், போதுமான கிருமி நாசினிகளை பயன்படுத்தியும், பணியாளர்கள், மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கண்காணிக்கவும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை தீவிரமாக கடைபிடிப்பதை உறுதிசெய்யவும் அறிவுறுத்தப்படுகிறது.

    ஊரடங்கு உத்தரவு தொடர்வதால், பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் மக்கள் கூடாமல் இருப்பதை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. கனிமம் மற்றும் சுரங்கப் பணிகள், கட்டுமானப் பணிகளுக்கு தேவையான பொருட்களை வழங்கும் செங்கல் சூளைகள், கல் குவாரிகள், எம்-சாண்ட், கிரசர்கள் மற்றும் இவற்றிற்கான போக்குவரத்து ஆகியன செயல்படலாம்.

    தொழிற்சாலைகளும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், பணிகளைத் தொடங்க இணைய வழியில் விண்ணப்பித்து பணியாளர் மற்றும் வாகனங்களுக்கு அனுமதி சீட்டுகள் பெற வேண்டும். முதல்-அமைச்சரின் ஆணைக்கு இணங்க பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு ஏற்ப வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ளவும் மற்றும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தங்கள் ஊழியர்கள் பயணம் செய்யும் பொருட்டு இ-பாஸ் பெற உருவாக்கியுள்ள http://www.tnepass.tngea.org என்ற இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

    இந்த நடைமுறைகளை பின்பற்றி, மாவட்ட கலெக்டரால் தொழிற்சாலைகளுக்கு தக்க அனுமதி வழங்கி நாளை (புதன்கிழமை) முதல் தொழிற்சாலைகள் செயல்படவும், தனி கடைகள் திறக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதல்-அமைச்சர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து நவீன எந்திரங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    இந்த கூட்டத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண், மாவட்ட வருவாய் அதிகாரி ராம துரைமுருகன், மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன்குமார் ஜடாவத், மாவட்ட தொழில் மைய மேலாளர் கார்த்திகைவாசன் மற்றும் தொழில் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×