search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    சென்னையில் இருந்து அருப்புக்கோட்டைக்கு நடந்தே வந்த வாலிபருக்கு கொரோனா

    சென்னையில் இருந்து அருப்புக்கோட்டைக்கு நடந்தே வந்த வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள செட்டிகுறிச்சியை சேர்ந்த 40 வயது கட்டிட தொழிலாளி சென்னையில் பணிபுரிந்து வந்தார்.

    கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக இவருக்கு சென்னையில் வேலை மற்றும் உணவு கிடைக்கவில்லை. எனவே சொந்த ஊருக்கு நடந்தே செல்வதென்று முடிவு செய்தார்.

    சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து புறப்பட்ட அவர் வழியெங்கும் தன்னார்வலர்கள் வழங்கிய உணவை சாப்பிட்டபடி மதுரை அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது விளாத்திகுளத்துக்கு காரில் சென்றவர்கள் கட்டிட தொழிலாளியின் பரிதாப நிலையை பார்த்து அவரை காரில் ஏற்றி அருப்புக்கோட்டை அருகே இறக்கி விட்டனர்.

    பின்னர் ஒரு வழியாக நடந்தே சொந்த ஊருக்கு திரும்பிய அவரை கிராம மக்கள் பந்தல்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு கட்டிட தொழிலாளியின் ரத்தம், சளி ஆகியவை பரிசோதித்து பார்க்கப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா உறுதியானது தெரியவந்தது.

    இதையடுத்து கட்டிட தொழிலாளி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    Next Story
    ×