search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தை
    X
    குழந்தை

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட மதுரை பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு நேற்று குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
    மதுரை:

    மதுரையில் நேற்று முன்தினம் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 24 வயது பெண்ணும் ஒருவர். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்த நிலையில் அங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் இவருடன் தொடர்பில் இருந்தவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் நேற்று அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தையும், அந்த பெண்ணும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.

    இதுகுறித்து மருத்துவமனை டீன் சங்குமணி கூறியதாவது:-

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது அவர்கள் இருவரும் நலமுடன் இருக்கிறார்கள். கொரோனா என்பது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் நோய் என்பதால் அந்த பெண்ணிடமிருந்து குழந்தைக்கு பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதன் அடிப்படையில் குழந்தைக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட இருக்கிறது.

    அந்த பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே குழந்தைக்கு பாதிப்பு இருக்கிறதா, இல்லையா? என்பதை உறுதியாக கூறமுடியும். அதுவரை குழந்தைக்கும் தாய்க்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×