search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தவசிமடையில் ஒரு வீட்டின் மேற்கூரை விழுந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    தவசிமடையில் ஒரு வீட்டின் மேற்கூரை விழுந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்றுக்கு 30 வீடுகளின் மேற்கூரை பறந்தது

    திண்டுக்கல் மாவட்டத்தில் வீசிய பலத்த சூறாவளி காற்றுக்கு 30 வீடுகளின் மேற்கூரை காற்றில் பறந்தது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வெயில் அதிகமாக இருந்தது. மதிய வேளைக்கு பின்னர் வானில் மேகங்கள் திரண்டதால், வெயிலின் தாக்கம் குறைந்தது. இதையடுத்து இடி, மின்னலுடன் பலத்த காற்றும் வீசியது. இதனால் நல்ல மழை பெய்யும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்த்தனர்.

    ஆனால் சுமார் 1 மணி நேரம் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் மழையின் வேகம் குறைந்தது. கொடைக்கானல், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, சாணார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமாரான அளவு மழை பெய்தது. இதற்கிடையே திண்டுக்கல் ஒன்றியம் அடியனூத்து அருகேயுள்ள கொல்ராம்பட்டியில் மின்னல் தாக்கியதில் லட்சுமி என்ற பெண் பலியானார். மேலும் 2 பெண்கள் காயம் அடைந்தனர்.

    அதேநேரம் பலத்த சூறாவளி காற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. திண்டுக்கல் சவேரியார்பாளையம், முனிசிபல் காலனி, நல்லமநாயக்கன்பட்டி மற்றும் சாணார்பட்டி அருகேயுள்ள தவசிமடை, விராலிபட்டி, வடகாட்டுப்பட்டி, நொச்சிஓடைப்பட்டி, கொசவபட்டி, கூவனூத்து புதூர், உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு வீடுகள், ஆஸ்பெஸ்டாஸ் வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. மாவட்டம் முழுவதும் 30 வீடுகளின் மேற்கூரை சேதமடைந்தது.

    அதேபோல் தோட்டங்களில் மின்கம்பங்களும் ஆங்காங்கே முறிந்து விழுந்தன. இதனால் ஒருசில கிராமங்களில் இரவு மின்தடை ஏற்பட்டது. கொடைரோடு அருகேயுள்ள ஒருத்தட்டு கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவரின் தோட்டத்தில் அரசு மானியத்துடன் அமைக்கப்பட்டிருந்த சோலார் மின்சார தகடுகள் சேதம் அடைந்தன.

    இதுஒருபுறம் இருக்கையில் பலத்த காற்றுக்கு விவசாய பயிர்கள் நாசமாகின. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை வத்தலக்குண்டு, கோட்டூர் ஆவாரம்பட்டி, சாணார்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, கூவனூத்து புதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் வாழைகள் பயிரிடப்பட்டு இருந்தன. இதில் செவ்வாழை, கற்பூரவல்லி வாழைகள் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான வாழைகள் குலைதள்ளி பாதி விளைச்சல் அடைந்து இருந்தன. இன்னும் ஒருசில வாரங்களில் அறுவடைக்கு தயாராகி விடும் நிலையில் இருந்தன. இந்த வாழைகளில் பெரும்பாலானவை பலத்த காற்றுக்கு சின்னாபின்னாமாகின.

    சிறுமலை, நிலக்கோட்டை, வத்தலக்குண்டு உள்பட மாவட்டம் முழுவதும் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த வாழைகள் சேதம் அடைந்து விட்டன. சூறவாளி காற்றுக்கு தென்னை மரங்கள், கொய்யா, மா மரங்களும் முறிந்து விழுந்தன. மேலும் நிலக்கோட்டை அருகேயுள்ள மைக்கேல்பாளையத்தை சேர்ந்த அமுல்ராஜ் (வயது 36) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த 2 ஆயிரம் பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்து நாசமாகின. இதுதவிர நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் பயிரிடப்பட்ட முருங்கை மரங்களும் முறிந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர். 
    Next Story
    ×