search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை வாலிபர் கண்டுபிடித்த ரோபா
    X
    கோவை வாலிபர் கண்டுபிடித்த ரோபா

    கொரோனா நோயாளிகளுக்கு உணவு, மருந்து கொடுக்க ரோபோ கண்டுபிடிப்பு- கோவை வாலிபர் அசத்தல்

    கொரோனா நோயாளிகளுக்கு உணவு, மருத்துகளை கொண்டு கொடுக்கும் வகையில் ஒரு ரோபோவை கோவையை சேர்ந்த வாலிபர் உருவாக்கி உள்ளார்.
    கோவை:

    கோவை வேடப்பட்டியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 29). கம்ப்யூட்டர் என்ஜினீயரிங்கில் டிப்ளமோ முடித்துள்ள இவர் செல்போன் செயலியை மேம்படுத்தி தரும் தொழில் செய்து வருகிறார். இவர் கொரோனா நோயாளிகளுக்கு உணவு, மருத்துகளை கொண்டு கொடுக்கும் வகையில் ஒரு ரோபோவை உருவாக்கி உள்ளார். அந்த ரோபோவை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று கொண்டு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு பணியாளர்கள், நர்சுகள் உணவு, மருந்துகள் கொடுப்பார்கள். அப்போது அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் சாலையோரங்களில் உணவின்றி இருப்பவர்களுக்கு சாப்பாடு கொடுக்கும் போதும் சமூக இடைவெளி விட்டுத்தான் கொடுக்க முடிகிறது. கொரோனா உறுதியானவர்களுக்கு உதவிகள் செய்யும் போது நமக்கும் கொரோனா வந்துவிடக்கூடாது என்று நினைப்பவர்களின் வசதிக்காக ஒரு ரோபோவை கண்டுபிடித்துள்ளேன். சுமார் 2 அடி உயரமுள்ள அந்த ரோபோ ஒரு சிறிய கார் போன்று இருக்கும். இதற்கான செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்த பின்னர் அதை இணையதள இணைப்பின் மூலம் நாம் எங்கிருந்தும் இயக்கலாம்.

    இந்த ரோபோ மூலம் கொரோனா நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை கொடுப்பதின் மூலம் மற்றவர்களுக்கு நோய் தொற்று ஏற்படாது. அந்த ரோபோவின் மேல்பகுதியில் ஒரு சிறிய பெட்டி வைக்கப்பட்டிருக்கும். அதில் 5 முதல் 7 கிலோ எடையுள்ள மருந்து மற்றும் உணவு பொருட்களை வைத்து விட்டு இயக்கினால் அது நேரடியாக யாருக்கு கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு நேரடியாக கொண்டு போய் கொடுத்து விடும். இதை உருவாக்க ரூ.3 ஆயிரம் செலவானது. மாவட்ட கலெக்டர் இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×