search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.எஸ்.அழகிரி
    X
    கே.எஸ்.அழகிரி

    எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை அடக்கி ஒடுக்க முடியாது- கே.எஸ்.அழகிரி

    தமிழக எதிர்கட்சிகளை அடக்கி ஒடுக்கி விடலாம் என்ற கனவு பகல் கனவாகதான் முடியும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் தனது உரையில் அனைத்து கட்சி கூட்டத்தை எதற்காக கூட்ட வேண்டும்? இவர்களிடம் ஆலோசனை பெறுவதற்கு இவர்கள் என்ன மருத்துவர்களா? தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்வதற்காக அ.தி.மு.க. ஆட்சி மீது நாள்தோறும் குற்றம் குறை கூறி வருகிறார்கள்” என்று ஆத்திரம் பொங்க கூறி இருக்கிறார்.

    இந்தியாவிலேயே கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது. ஆனால் மத்திய பா.ஜ.க. அரசிடமிருந்து நிதி உதவி பெறுவதில் 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

    அதேபோல விரைவு சோதனைக் கருவிகள் பெறுவதில் மத்திய அரசு கொள்முதல் செய்த 5 லட்சம் கருவிகளில் தமிழகத்திற்கு 12 ஆயிரம் சோதனை கருவிகள் தான் வழங்கப்படுகின்றன என முதல்-அமைச்சர் கூறுகிறார்.

    நிதி ஒதுக்கீடு செய்வதிலும், சோதனைக் கருவிகள் வழங்குவதிலும் மத்திய பா.ஜ.க. அரசு தமிழகத்தை வஞ்சித்து பாரபட்சமாக நடத்துவதை தட்டிக்கேட்க துணிவில்லை?

    அ.தி.மு.க. அமைச்சர்களை அடக்கி ஒடுக்கி கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்வதில் வெற்றி பெறலாம். ஆனால் தமிழக எதிர்கட்சிகளை அடக்கி ஒடுக்கி விடலாம் என்ற கனவு பகல் கனவாக தான் முடியும்.

    அத்தகைய மக்கள் விரோத அணுகுமுறையை தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் மக்கள் ஆதரவோடு முறியடித்து காட்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×