search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    கொரோனா ஒழிப்பில் மோடி விளம்பரம் தேடுகிறார்- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

    கொரோனா ஒழிப்பில் தீவிரம் காட்டுங்கள் என்றும் மலிவான விளம்பர அரசியலை தவிர்த்து ஆரோக்கியமான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பிரதமர் மோடி எடுக்கும் முடிவுகள் ஜனநாயக உணர்வோடு கலந்தாலோசனை செய்யாமல் தன்னிச்சையாக எடுக்கப்பட்டு வருவதால் பல்வேறு துன்பங்களை மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.

    சீனாவில் கொரோனாவினால் ஏற்படுகிற உயிரிழப்புகளை குறித்து அவருக்கு அப்போது எந்த கவலையும் இல்லை. ஆனால் ஜனவரி 30-ந்தேதியே கேரளாவில் முதல் கொரோனா தொற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு தொடர் பாதிப்புகள் காரணமாக மார்ச் 19-ந்தேதி தான் விமான நிலையங்களை மூடுவதற்கான அறிவிப்பை மோடி வெளியிட்டார்.

    கடந்த மார்ச் 24-ந்தேதி மக்கள் ஊரடங்கை அறிவித்தார். 136 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் மக்கள் ஊரடங்கை எந்த முன்னேற்பாடும் இல்லாமல் தன்னிச்சையாக அறிவித்ததின் விளைவைத்தான் இன்று நாட்டு மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.

    மாநில முதல்-அமைச்சர்களுடன் கலந்து பேசாமல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்த நான்கு மணி நேரத்தில் நடைமுறைக்கு வந்தது. இதனால் லட்சக்கணக்கான அமைப்பு சாரா தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து சொந்த ஊருக்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது.

    இவர்களை அந்த மாநிலத்திலேயே இருக்கவைத்து தங்குமிடம் மற்றும் உணவு உள்ளிட்ட வசதிகளை மாநில அரசுகள் மூலமாக மத்திய அரசு செய்திருந்தால் அவர்கள் வெளியூர்களுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

    இந்நிலையில் ரயில், பேருந்து போக்குவரத்து வசதிகள் ரத்து செய்யப்பட்டதால் நூற்றுக்கணக்கான மைல்கள் நடைபயணமாகவே தங்களது ஊருக்கு செல்லவேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது. நாடு முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்கிற நிலை ஏற்பட்டது.

    இந்த சூழலில் போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் இருந்து நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தை நோக்கி சில நண்பர்களுடன் நடைபயணமாக வந்த 21 வயது நிரம்பிய மாணவர் லோகேஷ் பாலசுப்ரமணியன் செகந்தராபாத் நகரத்திற்கு வந்தபோது மயங்கி கீழே விழுந்திருக்கிறார்.

    அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக கூறப்பட்டு, அவரது சடலம் பள்ளிபாளையத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது. எந்த தவறையும் செய்யாத லோகேஷ் பாலசுப்ரமணியன் இறப்புக்கு யார் பொறுப்பு? இதற்கான பொறுப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொள்வாரா?

    இத்தகைய கொடூர சம்பவங்கள் நடப்பதற்கு பிரதமர் மோடியின் ஆட்சி தான் காரணம் என்று குற்றம் சாட்ட விரும்புகிறேன். இந்த உயிரிழப்பு ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக குறிப்பிட விரும்புகிறேன்.

    எனவே, பிரதமர் மோடி அவர்களே, போதும் இழப்பு. இனியாவது கொரோனா ஒழிப்பில் தீவிரம் காட்டுங்கள். மலிவான விளம்பர அரசியலை தவிர்த்து ஆரோக்கியமான உரிய நடவடிக்கைகளை எடுத்து மக்களை காப்பாற்ற முன் வாருங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×