search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கொரோனாவுக்கு அஞ்சாமல் ஊர்சுற்றிய 50 ஆயிரம் பேர் கைது- ரூ. 10 லட்சம் அபராதம் வசூல்

    தமிழகம் முழுவதும் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறி ஊர் சுற்றிய 50 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மனித உயிர்களை வேட்டையாடி வருகிறது.

    அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் பலி எண்ணிக்கை 38 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

    தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.

    நாடு முழுவதும் கடந்த 24-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் வெளியில் சுற்றுபவர்களை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் போலீஸ் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது.

    தமிழகத்திலும் போலீசார் சாலையில் சுற்றி திரிந்தவர்கள் மீதும் கார்-மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீதும் தீவிர நடவடிக்கைகளை எடுத்தனர்.

    ஆரம்பத்தில் தடியடி நடத்தி பொது மக்களை விரட்டிய போலீசார் பின்னர் அறிவுரைகள் கூறியும், தோப்புக்கரணம் உள்ளிட்ட நூதன தண்டனைகளை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இருப்பினும் பொதுமக்கள் பலர் கொரோனா பயமின்றி வெளியில் சுற்றித்திரிந்து கொண்டே இருக்கிறார்கள். இதுபோன்று வெளியில் சுற்றுபவர்கள் மீது ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த மறுநாளில் இருந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 6 நாட்களில் 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ரு10 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 45 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் ஜாமீனில் விடுவித்துள்ளனர். இருப்பினும் அவர்கள் பயன்படுத்திய 34 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    தமிழகம் முழுவதும் போலீஸ் நிர்வாக வசதிக்காக வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு, மத்திய ஆகிய 5 மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த 5 மண்டலங்களையும் போலீஸ் ஐ.ஜி. ஒருவர் நிர்வகித்து வருகிறார்.

    தமிழகம் முழுவதிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கையின்படி கடந்த 28-ந்தேதி வரையிலான புள்ளி விவரப்படி வடக்கு மண்டலத்தில் 2 ஆயிரத்து 621 வழக்குகள் பதிவாகி உள்ளன.

    3 ஆயிரத்து 56 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்திய 2 ஆயிரத்து 303 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    மத்திய மண்டலத்தில் 1,895 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2,435 பேர் கைதாகியுள்ளனர். தெற்கு மண்டலத்தில் 2,477 பேர் கைது செய்யப்பட்டு 2,095 வழக்குகள் பதிவாகி உள்ளன. 1,547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 28-ந்தேதி நிலவரப்படி மேற்கு மண்டலத்தில் 148 பேர் கைதாகி இருந்தனர்.

    கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு வெளியில் வராமல் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி வெளியில் வருபவர்களை கட்டுப்படுத்த போலீஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

    இருப்பினும் பொதுமக்கள் அதனையும் மீறி வெளியில் சுற்றுவதால் தமிழகம் முழுவதும் போலீசார் பொது மக்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாகவே 50 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யும் சூழலும் ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதை கருத்தில் கொண்டு மக்கள் வெளியில் நடமாடுவதை முற்றிலும் குறைக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
    Next Story
    ×