search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினேஷ்
    X
    தினேஷ்

    பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டு நித்யானந்தா சீடர் தற்கொலை

    ஆத்தூர் அருகே பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த நித்யானந்தா சீடர், காதல் தோல்வி குறித்து உருக்கமாக தெரிவித்துள்ளார்.
    தலைவாசல்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஆறகளூர் ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் அந்த பகுதியில் செருப்புக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி கலையரசி.

    இவர்களுக்கு தினேஷ் (வயது 27) என்ற மகனும், ராஜேஸ்வரி, ரம்யா ஆகிய 2 மகள்களும் இருந்தனர். ராஜேஸ்வரி மற்றும் ரம்யாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. தினேசிற்கு திருமணம் ஆகவில்லை.

    எம்.இ. பட்டதாரியான இவர் கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள சாமியார் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் அவருக்கு சீடராக தினேஷ் இருந்தார். 7 மாதங்கள் நித்யானந்தாவின் சீடராக இருந்த தினேசை அவரது பெற்றோர் சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர். பின்னர் தான் அவர் சென்னையில் தங்கியிருந்தார்.

    இந்தநிலையில் நேற்று காலை 4 மணிக்கு சென்னையில் இருந்து தினேஷ் ஆறகளூர் வந்தார். பின்னர் வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்று விட்ட நிலையில் தனியாக இருந்த தினேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவரது தந்தை மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

    தகவல் அறிந்த தலைவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தினேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் முகநூலில் (பேஸ்புக்) ஒரு வீடியோவை பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. அந்த வீடியோவை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அதில் நான் ஒரு பெண்ணை காதலித்தேன். ஆனால் அந்த பெண்ணின் பெற்றோர் தவறான தகவலை கூறி எங்களை பிரித்து விட்டனர். அதில் உண்மை இல்லை என்பதை என்னால் நிரூபிக்க முடியாததால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

    முதுகலை பொறியியல் பட்டதாரியான தினேஷ் படிப்பிற்கு ஏற்ற வேலைகிடைக்காததால் கடந்த 2017-ம் ஆண்டு நித்யானந்தா ஆசிரமத்தில் சீடராக சேர்ந்தார். அப்போது தினேஷ் என்ற பெயரை வீர பத்ரானந்தா என மாற்றி நித்தி அடி கும்பல் என்ற பெயரில் இயங்கிய மீம்ஸ் குழுவில் செயல்தலைவராக இருந்து நித்திக்கு எதிராக பேசுபவர்களுக்கு மீம்ஸ் மூலம் பதிலடி கொடுத்து வந்தார்.

    அப்போது அதே ஆசிரமத்தில் நித்தியின் சிஷ்யையாக இருந்த ஒரு பெண்ணுக்கும், தினேசுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் அந்த பெண்ணின் தந்தைக்கு தெரிய வந்ததும் தனது மகளுக்கு ஜாதகத்தில் தோஷம் எனக்கூறி தினேசை தவிர்த்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே தங்கள் மகன் நித்தியிடம் இருப்பதை விரும்பாத பெற்றோர் மகனிடம் நித்தியானந்தாவின் செயல்பாடுகளை எடுத்து சொல்லி வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

    பெண் சிஷ்யையின் காதலால் நித்தியின் ஆசிரமத்தை பிரிய மனமில்லாமல் தவித்த தினேஷ் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு செல்வதாக கூறி திரிசூலத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதி ஒன்றில் கண்டெய்னரில் ஆசிரமம் நடத்தி வரும் நித்தியின் சென்னை கிளையின் கைலாசவாசியாக இணைந்து மீண்டும் பத்ரானந்தாவானார்.

    மேலும் நித்யானந்தா நியூஸ் என்பதை சுருக்கி என் நியூஸ் என்ற பெயரில் யூடியூப் செய்தி சேனல் நடத்தி வந்த பத்ரானந்தா, நித்தியின் நம்பிக்கைக்குரிய சீடர்களில் ஒருவராக வலம் வந்த படியே தனது காதலையும் வளர்த்தார்.

    இதற்கிடையே தினேஷ் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு வீடியோ எடுத்து மிரட்டி வருகிறான் என கூறி அந்த பெண்ணின் தந்தை மகளின் மனதை மாற்றியதோடு, காதலுக்கும் தடை போட்டார். இதனால் தினேசிடம் காதலி பேச மறுத்தார்.

    இதனால் ஏற்பட்ட விரக்தியில் சொந்த ஊருக்கு வந்த தினேஷ் தந்தை ராமச்சந்திரனிடம் தனது காதல் விவகாரத்தை சொல்லி அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்குமாறு கூறினார். ஆனால் அவரது தந்தையும் அதனை கண்டு கொள்ளாததால் தினேஷ் மேலும் மனம் உடைந்தார்.

    நேற்று தாய், தந்தை இருவரும் வெளியே சென்று விட்ட நிலையில் கதவை உள்புறமாக தாழிட்ட அவர் காதல் தோல்வி குறித்து உருக்கமான வீடியோவை பதிவு செய்து அதனை பேஸ்புக்கில் வெளியிட்டு விட்டு தனது வாழ்க்கையை முடித்து கொண்டதும் தெரிய வந்தது.

    நித்யானந்தாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரை தேடி வரும் நிலையில் அவரை நம்பி பேஸ்புக்கில் கைலாசவாசி என்று புரபைல் படம் வைத்த சீடர்கள் ஒவ்வொருவராக உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே 3 சீடர்கள் உயிரிழந்த நிலையில் 4-வதாக ஒரு சீடர் சேலம் மாவட்டத்தில் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தற்கொலை செய்வதற்கு முன்பு பேஸ்புக்கில் உருக்கமாக பேசிய தினேஷ்

    தற்கொலை செய்யும் முன் நித்யானந்த சீடர் தினேஷ் அதற்கான காரணம் குறித்து வீடியோ பதிவு செய்து அதனை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம் வருமாறு:-

    இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் வணக்கம், நான் தூக்கு மாட்டிக்க போறேன். இதற்கு காரணம் நித்யானந்தா சீடராக உள்ள சென்னையை சேர்ந்த விஸ்வரூபா என்பவருடைய பெண்ணை காதலித்தேன். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தோம்.

    இதற்கு அந்த பெண்ணின் தந்தையும் சம்மதித்தார். அதன் பின்னர் ஜாதகம் பார்த்து விட்டு வந்து ஜாதகம் சரியில்லை என்று பொய் சொன்னார். பரிகாரம் செய்துவிட்டு கல்யாணம் செய்து வைப்பதாக கூறினார். 6 மாதத்தில் திருமணம் செய்து வைப்பதாக கூறினார்.

    ஆனால் திருமணம் செய்து வைக்கவில்லை. மேலும் அவரோட பெண்ணிடம் என்னை பற்றி தப்பு தப்பாக சொல்லி இருக்கிறார். மற்ற பெண்களுடன் நான் தொடர்பு வைத்துக்கொண்டதால் நித்தியானந்தா ஆசிரமத்தில் தான் நான் தங்கியிருந்த இடத்தில் ஆண், பெண்களுக்கு தனித்தனி கேம்பஸ் என பிரித்ததாகவும், பெண்களை கேமரா வைத்து போட்டோ எடுத்து இது போல செய்வதாகவும், எனது மனைவியிடம் (காதலி) கூறி என்னை பிரித்துவிட்டார்.

    நான் அப்படி இல்லை என்று எவ்வளவோ? சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. கடைசியாக எனக்கு வேறு வழி தெரியவில்லை, இதனால் இந்த முடிவை எடுக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

    இந்த பேச்சு தற்போது பேஸ்புக்கில் வைரலாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×