search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கக்கட்டிகள்
    X
    தங்கக்கட்டிகள்

    நடுக்கடலில் வீசப்பட்ட 15 கிலோ தங்கம் மீட்பு- 2 வாலிபர்கள் கைது

    இலங்கையில் இருந்து கடத்தி வந்து கடலுக்குள் வீசப்பட்ட ரூ.7 கோடி மதிப்புள்ள 15 கிலோ தங்கம் அதிகாரிகளின் நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்துக்கு படகு மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து ஹோவர் கிராப்ட் கப்பலில் நேற்று முன்தினம் இரவு இந்திய கடலோர காவல்படையினர் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு சென்றனர்.

    அப்போது மண்டபம் அருகே முயல்தீவுக்கும், வேதாளைக்கும் இடைப்பட்ட பகுதியில் கடலில் சென்ற ஒரு பைபர் படகை நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த படகில் இருந்த 2 பேர் படகை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். இதையடுத்து கடலோர காவல்படையினர் அந்த படகை விரட்டி பிடித்தனர்.

    பின்னர் அந்த படகையும், அதில் இருந்த மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினத்தை சேர்ந்த ஆசிக் (வயது 22), பாரூக் (22) ஆகியோரையும் கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தினர். படகையும் சோதனையிட்டனர். ஆனால் அதில் ஒன்றும் சிக்கவில்லை.

    இருந்தாலும் அந்த வாலிபர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. தீவிர விசாரணைக்கு பின்னர்தான் அவர்கள் இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அந்த தங்கக்கட்டிகளை, கடலோர காவல் படை துரத்தியதை தொடர்ந்து கடலில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் வீசிவிட்டதாக தெரிவித்தனர். மேலும் தங்கம் வீசப்பட்ட கடல் பகுதியை ஜி.பி.எஸ். கருவியின் உதவியுடன் அடையாளம் காணும் வகையில் அந்த இடத்தை பதிந்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

    அதனைத்தொடர்ந்து நேற்று காலை மண்டபத்தில் இருந்து மீண்டும் கப்பல் மூலம் இந்திய கடலோர காவல்படையினரும், மத்திய வருவாய் புலனாய்வு துறையினரும் வாலிபர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு நடுக்கடலுக்கு புறப்பட்டனர். தங்கத்தை வீசியதாக கூறப்பட்ட இடத்தை அவர்கள் அடையாளம் காட்டினர்.

    இந்திய கடலோர காவல்படை வீரர்கள் 3 பேர், கடலில் குதித்து 5 பார்சல்களை எடுத்து வந்தனர். அந்த பார்சல்கள் கருப்பு நிறத்தில் இருந்தன. அவற்றின் உள்ளே ஏராளமான தங்கக்கட்டிகள் இருந்தன.

    பின்னர் அந்த தங்கக்கட்டிகள் இந்திய கடலோர காவல்படை நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. பின்பு நகை மதிப்பீட்டாளர் வரவழைக்கப்பட்டு எடை போட்டதில் மொத்தம் 15 கிலோ தங்கக்கட்டிகள் இருந்தன. இதன் சர்வதேச மதிப்பு ரூ.7 கோடி என்று கூறப்படுகிறது.

    கடந்த 5 வருடத்துக்கு பிறகு இவ்வளவு அதிகமான கடத்தல் தங்கம் ராமேசுவரம் பகுதியில் பிடிபட்டிருப்பது இதுவே முதன்முறையாகும். அதனை கடத்தி வந்த ஆசிக், பாரூக் ஆகிய 2 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதேபோல கடந்த மாதம் 15-ந்தேதி இலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலம் ராமேசுவரத்துக்கு கடத்தி வரப்பட்ட 3½ கிலோ தங்க கட்டிகளுடன் இலங்கையை சேர்ந்த 3 பேர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×