search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    மத்திய தொல்லியல்துறை தமிழக கோயில்களை கையகப்படுத்த கூடாது- ராமதாஸ்

    தமிழகத்திலுள்ள கோயில்களை கையகப்படுத்தும் திட்டம் தொல்லியல் துறைக்கு இருந்தால் அதை கைவிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள பழமை வாய்ந்த கோயில்களின் நிர்வாகத்தை மத்திய தொல்லியல் துறைக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதன்படி தமிழகத்திலுள்ள பல கோயில்களின் பராமரிப்பும் நிர்வாகமும் மத்திய தொல்லியல் துறைக்கு மாற்றப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இது தமிழக மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் செயல் ஆகும்.

    தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய பெருமைமிக்க கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையால் ஒப்பீட்டளவில் சிறப்பாகவே பராமரிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை என்ன காரணத்திற்காக மத்திய தொல்லியல் துறையிடம் தாரை வார்க்க மத்திய அரசு துடிக்கிறது என்று தெரியவில்லை.

    இந்த தகவலை வெளியிட்ட மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், அதற்கான காரணங்களை தெரிவிக்கவில்லை. தமிழக கோயில்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றை மத்திய தொல்லியல்துறைக்கு மாற்ற வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட கோயில்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் முயற்சி என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. அப்பட்டமான இந்த கலாச்சார படையெடுப்பை அனுமதிக்க முடியாது.

    வழிபாட்டில் உள்ள கோயில்களை மத்திய தொல்லியல்துறையிடம் ஒப்படைப்பதென்பது அக்கோயிலை மூடுவதற்கு ஒப்பானதாகும். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பொதுமக்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் சென்று வழிபாடு நடத்த முடியும்.

    தஞ்சாவூர் பெரிய கோயில், மாமல்லபுரம், செஞ்சி தேசிங்கு ராஜன் கோட்டை, திருவண்ணாமலை கந்தர் ஆசிரமம் ஆகியவை மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்கு சென்ற பிறகு அவற்றின் பராமரிப்பு மிகவும் மோசமாகி விட்டது என்பது உண்மை.

    தமிழகத்தில் மீதமுள்ள கோயில்கள் சிறந்த பராமரிப்புடனும், பக்தர்கள் வருகையுடனும் உயிரோட்டமாக திகழ வேண்டுமானால் அவை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலேயே தொடர வேண்டும்.

    இந்தியாவில் ஏதேனும் கோயில்கள் பெருமையுடனும், புகழுடனும் இருந்தால் அந்தக் கோயில்களை தங்கள் வசமாக்கிக் கொள்வது மத்திய தொல்லியல் துறையின் வாடிக்கையாகி வருகிறது. 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தை மத்திய தொல்லியல் துறை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவித்து அதன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது.

    அதனால் அந்தக் கோயிலின் வழக்கமான வழிபாட்டு முறைகள் பாதிக்கப்பட்ட நிலையில், மூன்றாண்டு கால அரசியல் மற்றும் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு அந்த கோயில் மத்திய தொல்லியல் துறையிடமிருந்து 2005-ம் ஆண்டில் மீட்கப்பட்டு, தமிழக இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு தான் அந்தக் கோயிலுக்கு அதன் பழைய பொலிவும், பெருமையும் திரும்பக் கிடைத்தது.

    கடந்த 2018-ம் ஆண்டில் கூட திருப்பதி ஏழுமலையான் கோயிலை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள முடிவு செய்த மத்திய தொல்லியல் துறை, அதை வலியுறுத்தி திருப்பதி கோயில் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியது. ஆனால், அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து தொல்லியல் துறை அதன் முடிவை திரும்பப் பெற்றது.

    இப்போது அடுத்தக் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள கோயில்களை கையகப்படுத்த தொல்லியல் துறை துடிப்பது நியாயமல்ல. தமிழகத்திலுள்ள கோயில்களை கையகப்படுத்தும் திட்டம் தொல்லியல் துறைக்கு இருந்தால், அதை கைவிட வேண்டும். தமிழ்நாட்டு கோயில்களை தொல்லியல் துறை கையகப்படுத்த முயன்றால் அதை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×