search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாட்டு வெடிகுண்டு வெடித்த இடத்தில் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்த காட்சி.
    X
    நாட்டு வெடிகுண்டு வெடித்த இடத்தில் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்த காட்சி.

    புதுவை அருகே சுடுகாட்டில் வெடிகுண்டு வெடித்தது- தொழிலாளி படுகாயம்

    புதுவை அருகே சுடுகாட்டில் வெடிகுண்டு வெடித்து தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் அருகே கோர்க்காடு பேட் பகுதியில் சுடுகாடு உள்ளது. இதன் பின்பகுதியில் புதிதாக வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்கான வேலைகளில் தொழுலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் கட்டிடத்தின் பின்பகுதியில் அமைத்திருந்த சவுக்கு கட்டைகளால் ஆன சாரம் திடீரென்று சரிந்து கீழே விழுந்தது.

    இதையடுத்து கட்டிட தொழிலாளியான குருவிநத்தத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 40) என்பவர் கட்டிடத்தின் பின்பகுதிக்கு சென்று கீழே விழுந்து கிடந்த சவுக்கு கட்டையை அப்புறப்படுத்தினார்.

    அப்போது அங்கு மஞ்சள் பையில் வைத்திருந்த மர்ம பொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    சத்தம் கேட்டு அங்கிருந்த மற்ற தொழிலாளர்கள் ஓடிச்சென்று பார்த்த போது அங்கு வெடிகுண்டு வெடித்து தலை, காலில் படுகாயம் அடைந்து வெங்கடேஷ் அலறி துடித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து அவரை அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வெடிகுண்டு வெடித்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, மங்கலம் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரண்யா, தயாளன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வர வழைக்கப்பட்டு குண்டு வெடித்த இடத்தில் கிடந்த துகள்களை சேகரித்து ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் சுடுகாடு பகுதியில் பையில் நாட்டு வெடிகுண்டை பதுக்கி வைத்திருந்ததும், சவுக்கு கட்டையை நகர்த்திய போது உராய்வு ஏற்பட்டு அது வெடித்ததும் தெரிய வந்தது. வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்த பையில் ஒரு கத்தி மற்றும் குண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களும் இருந்தன.

    கொலை செய்யும் திட்டத்துடன் அப்பகுதியை சேர்ந்த ரவுடி கும்பல் வெடிகுண்டை தயாரித்து சுடுகாடு பகுதியில் பதுக்கி வைத்திருக்கலாம் என்றும் அவர்கள் யார்? எதற்காக வெடிகுண்டை பதுக்கி வைத்திருந்தார்கள்? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×