search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருநாவுக்கரசர்
    X
    திருநாவுக்கரசர்

    போராட்டங்களை அரசியல் கட்சிகள் தூண்டிவிடுவதாக ரஜினி கூறுவது தவறு- திருநாவுக்கரசர்

    டெல்லி போராட்டங்களை அரசியல் கட்சிகள் தூண்டிவிடுவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறுவது தவறு என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

    திருச்சி:

    திருச்சியில் இன்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருச்சி பாராளுமன்ற தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து மத்திய, மாநில அரசுகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஜங்‌ஷன் ரெயில்வே மேம்பாலம், கூடுதலாக புதிய ரெயில்கள், ஒருங்கிணைந்த பஸ் நிலையம், ரிங்ரோடு உள்ளிட்ட பல பணிகள் குறித்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறேன்.

    எம்.பி. தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதி பற்றாக்குறையாக உள்ளது. ஒரு எம்.பி. தொகுதிக்கு 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஆண்டுக்கு ரூ.5 கோடி தான் ஒதுக்குகிறார்கள். ஆனால் தமிழக அரசு ஒரு சட்டமன்ற தொகுதிக்கு எம்.எல்.ஏ.க்களுக்கு ஆண்டுக்கு ரூ.3 கோடி ஒதுக்குகிறது. எம்.பி.க்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடி மட்டும் ஒதுக்குவதால் நாங்கள் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா ரூ.75 முதல் 80 லட்சம் வரை மட்டுமே செலவிட முடிகிறது.

    பல ஊர்களில் எம்.பி.க்களிடம் மக்கள் சமுதாயகூடம், பள்ளி கட்டிடம், குடிநீர் தொட்டி, நூலகம், பஸ் நிலையம், உயர்கோபுர மின்விளக்கு, சாலைகள் என பல அடிப்படை வசதிகளை கேட்டு மனுக்களை கொடுத்து வருகிறார்கள்.

    மத்தி அரசு தற்போது ஒதுக்கும் நிதியால் அனைத்து மக்களின் கோரிக்கைகளுக்கும் நிதி ஒதுக்க முடியாத நிலை உள்ளது. மக்களிடமிருந்து எம்.பி.க்கள் வெறும் மனுக்களை மட்டுமே வாங்கிக் கொண்டிருக்க முடியாது. எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி முதன் முதலில் 1989-ம் ஆண்டு சட்ட மன்றத்தில் நான் எம்.எல்.ஏ. வாக இருந்தபோது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியிடம் பேசி பெற்றுத்தந்தேன்.

    அப்போது கருணாநிதி ஆண்டுக்கு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கினார். மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டுமென பாராளுமன்றத்தில் நான் பேசியபோது அனைத்து எம்.பி.க்களும் அதை கைத்தட்டி வரவேற்றார்கள். மத்திய அரசு நிதியை உயர்த்தி வழங்காவிட்டால் எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதியை பேசாமல் நிறுத்தி விடலாம்.

    தமிழகத்தில் ஏற்கனவே முடிந்துள்ள உள்ளாட்சி தேர்தல் 35 சதவீதம் மட்டும் தான் முடிந்துள்ளது. மீதியுள்ள தேர்தலையும் உடனே நடத்த வேண்டும். பஞ்சாயத்து நிதி கையாளுதல் பிரச்சினையை தடுக்கவே காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி எப்போதும் தொடர வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் தொண்டர்கள், மக்களின் எண்ணமாகும். தி.மு.க. தனித்து போட்டியிட வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஏற்கனவே தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்ட போது 2 பேருக்குமே தோல்விதான் ஏற்பட்டுள்ளது.

    காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி உடனே பதவியேற்பது நல்லது. ஏற்கனவே காங்கிரஸ் எடுக்கும் தாமதமான முடிவுகள் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக நான் இருந்தபோது தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான ரூ.500 கோடி சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுத்தேன்.

    ஆனால் அதன்பிறகு அதற்காக அமைக்கப்பட்ட குழுவை கலைத்துவிட்டு புதிய குழுவை அமைத்தார்கள். ஏற்கனவே இருந்த கூடுதல் குழுவோடு புதிய உறுப்பினர்களை நியமித்திருக்கலாம். ஆனால் கலைப்பது சரியல்ல.

    ரஜினிகாந்த்

    நடிகர் ரஜினிகாந்த் டெல்லி கலவரத்திற்கு உளவுத்துறை தோல்விதான் காரணம் என்று கூறி மத்திய அரசை கண்டித்துள்ளார். இதை கமல் வரவேற்றுள்ளார். நானும் ரஜினி கருத்தை வரவேற்கிறேன். சமீபகாலமாக அவர் தன்னை அனைவரும் பா.ஜ.க.வின் ஊதுகுழல் என்று கூறுவதையும் மறுத்திருக்கிறார். அதே நேரத்தில் போராட்டங்களை அரசியல் கட்சிகள் தூண்டிவிடுவதாக அவர் கூறியிருப்பது தவறு. அரசியல் கட்சியினருக்கு அது வேலையல்ல. மக்களை அரசியல் கட்சியினர் யாரும் போராட வாருங்கள் வாருங்கள் என்று போய் அழைப்பதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×