search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூவை மகாராஜன்
    X
    பூவை மகாராஜன்

    சாத்தான்குளம் அருகே அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் தொழிலாளி கைது

    சாத்தான்குளம் அருகே அதிமுக நிர்வாகி கொலையில் மாவு மில் தொழிலாளி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பூச்சிக்காட்டை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் பூவை மகாராஜன்(வயது 34). விவசாயியான இவர் பால் வியாபாரம் செய்து வந்தார். மேலும் சாத்தான்குளம் ஒன்றிய அ.தி.மு.க. இளைஞர் பாசறை செயலாளராகவும் இருந்தார்.

    இவரது வீட்டின் எதிரே கந்தசாமி (35) என்பவரது வீடு உள்ளது. இவர் காஞ்சிபுரத்தில் மாவு மில் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். அங்குள்ள சந்தன மாரியம்மன் கோவிலில் கணக்கு வழக்கு பார்ப்பது சம்பந்தமாக பூவை மகாராஜன் குடும்பத் தினருக்கும், கந்தசாமி குடும் பத்தினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஏற்கனவே கோவில் கணக்கு வழக்கை பார்த்துக்கொண்டிருந்த கந்தசாமியின் பெரியப்பா ஆறுமுகத்திடமிருந்து, அதனை பூவை மகாராஜன் மற்றும் அவரது தந்தை சுப்பிரமணியன் வாங்கிக் கொண்டனர். அதன்பிறகு அவர்களே கோவில் கணக்குகளை பார்த்து வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் கூழ் வைக்க கந்தசாமியிடம் பூவை மகாராஜன் வரி கேட்டுள்ளார். அதற்கு வரி தர மறுத்த கந்தசாமி அவரை அவதூறாகவும் பேசியுள்ளார்.

    தனது பெரியப்பாவிடம் இருந்து கோவில் நிர்வாகத்தை பறித்து கொண்டதால் பூவை மகாராஜன் மீது ஆத்திரத்தில் இருந்த கந்தசாமி, அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இந்தநிலையில் நேற்று மாலை பூவை மகாராஜன் சாத்தான்குளம் அருகே உள்ள மேட்டுவிளைக்கு பால் எடுக்க சென்றார்.

    அப்போது அங்குள்ள தரைபாலம் அருகே கந்தசாமி உருட்டுக்கட்டையுடன் காத்திருந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த பூவை மகாராஜனை வழி மறித்து பைக்கில் இருந்து கீழே தள்ளினார். அவர் சுதாரிப்பதற்குள் உருட்டுக்கட்டையால் அவரது நெஞ்சு மற்றும் தலை பகுதிகளில் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதில் பூவை மகாராஜன் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார். இதனை அந்த வழியாக வந்தவர்கள் பூவை மகாராஜனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த அவரது உறவினர்கள், அவரை மீட்டு திசையன்விளை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தட்டார்மடம் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் (பொறுப்பு) ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மகாராஜனை அடித்துக் கொன்ற கந்தசாமியை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது பூவுடையார்குளம் அருகே உள்ள தேரிக்காட்டில் பதுங்கியிருந்த கந்தசாமியை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். போலீசில் கந்தசாமி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது பெரியப்பாவிடம் இருந்து பூவை மகாராஜனும், அவரது தந்தையும் கோவில் நிர்வாகத்தை பறித்துக்கொண்டனர். மேலும் அனைத்து ஊர் காரியங்களையும் அவர்களே முன் நின்று நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த நான் பூவை மகாராஜனை கொலை செய்து விட வேண்டும் என முடிவு செய்தேன்.

    அதன்படி 4 நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்து பூவை மகாராஜனை கொலை செய்ய திட்டம் தீட்டினேன். நேற்று அவர் பால் எடுக்க சென்றபோது வழிமறித்து உருட்டுக்கட்டையால் தாக்கி கொன்றுவிட்டு தப்பி ஓடி விட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைது செய்யப்பட்ட கந்தசாமியை கோர்ட்டில் இன்று போலீசார் ஆஜர்படுத்தினர். கொலை செய்யப்பட்ட பூவை மகாராஜனுக்கு பத்மா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×