search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட விக்னேஸ்வரன் - தாய் செல்வி
    X
    கொலை செய்யப்பட்ட விக்னேஸ்வரன் - தாய் செல்வி

    வாலிபர் கொலையில் திடீர் திருப்பம் - போதையில் டார்ச்சர் செய்ததால் தாயே வெட்டிக் கொன்றது அம்பலம்

    கம்பம் அருகே துண்டுதுண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட வாலிபர் கொலை வழக்கில் தாயை போலீசார் கைது செய்தனர்.
    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி சாலையில் தொட்டமன் துறையில் முல்லைப்பெரியாறு செல்லும் பகுதியில் சாக்கு மூட்டையில் வாலிபர் உடல் தலை, கை, கால்கள் இல்லாமல் கிடந்தது. இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    நேற்று முன்தினம் இரவு ஒரு பெண்ணும், ஒரு வாலிபரும் சாக்கு மூட்டையில் கொலை செய்யப்பட்டவரின் உடலை வீசிச் சென்றது தெரிய வந்தது. அப்பகுதியில் பதிவான சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் நந்த கோபாலன் சாமி தெற்கு வாசல் தெருவைச் சேர்ந்த ராஜா மனைவி செல்வி (வயது 49) என்பதும், அவருடன் வந்தது அவரது 2-வது மகன் விஜய் பிரசாத் (25) என தெரிய வந்தது. போலீசார் செல்வியிடம் விசாரணை நடத்தியதில் தான் கொலை செய்ததை ஒத்துக் கொண்டார்.

    இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், செல்வியின் கணவர் ராஜா கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதன் பிறகு செல்வி தனது 2 மகன்களான விக்னேஸ்வரன் (30), விஜய்பிரசாத் (25) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். விக்னேஸ்வரன் என்ஜினீயரிங் பட்டதாரி. மேலும் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். போதை பழக்கத்துக்கு அடிமையானதால் கல்லூரியில் இருந்து 2 முறை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    அதன் பிறகு தனது சொந்த தேவைக்கும், போதை பழக்க வழக்கத்துக்காகவும் திருட்டு தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இது மட்டுமின்றி தவறான நண்பர்களின் பழக்க வழக்கமும் இருந்தது. இதனால் தினமும் வீட்டில் தனது தாயிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

    இதன் காரணமாக அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் யாரும் இவர்களுடன் பேசுவதை தவிர்த்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு விக்னேஸ்வரனின் தம்பி விஜய்பிரசாத் காதல் திருமணம் செய்துள்ளார். தனது மனைவியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

    தனக்கு திருமணம் ஆகாத நிலையில் தனது தம்பி திருமணம் செய்து கொண்டதால் தன்னை அவமதித்து விட்டதாக விக்னேஸ்வரன் நினைத்தார்.

    இதனால் தம்பியிடமும், தாயிடமும் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இவரது நடவடிக்கையை பார்த்த விஜய் பிரசாத்தின் மனைவி அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் தனது மகனை கொலை செய்ய செல்வி முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் போதை தலைக்கேறிய நிலையில் வந்த விக்னேஸ்வரனுக்கு சாப்பாடு கொடுத்துள்ளார்.

    அந்த உணவில் வி‌ஷம் கலந்து கொடுத்து மகனை கொன்றுள்ளார். அதன் பிறகு தனது மனதை கல்லாக்கிக் கொண்டு பெற்ற மகன் என்றும் பாராமல் அவரது உடலின் ஒவ்வொரு பாகங்களையும் அரிவாளால் வெட்டி தனித்தனியாக எடுத்தார். உடலை மட்டும் சாக்கு பையில் கட்டி தொட்டமன் துறை தடுப்பணையில் வீசியுள்ளார்.

    முன்னதாக தலையை வீரப்பநாயக்கன் குளம் அருகில் உள்ள கிணற்றிலும், கை மற்றும் கால்களை காந்தி நகருக்கு மேற்கே வெயிலடிச்சான் ஓடை அருகில் உள்ள கிணற்றிலும் வீசிச் சென்றுள்ளார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தலையை நேற்று இரவு போலீசார் மீட்டனர்.

    ஆனால் கைகள் மற்றும் கால்களை தேடிப்பார்த்த போது கிடைக்கவில்லை. இரவு நேரம் ஆகி விட்டதால் உடல் பாகங்களை தேடுவதை நிறுத்தி விட்டு இன்று 2-வது நாளாக போலீசார் தேடி வருகின்றனர்.

    செல்வி கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த கொலையில் உடல் பாகங்களை மறைக்க மேலும் 2 பேர் உடந்தையாக இருந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே செல்வியின் 2-வது மகன் விஜய்பிரசாத், செல்வியின் அண்ணன் ஆகியோரும் சம்மந்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    எனவே போலீசார் அவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இது மட்டுமின்றி போதை பழக்கத்துக்காக மகனை வெட்டி கொன்று விட்டு உடலின் பாகங்களை துண்டு துண்டாக வெட்டும் அளவுக்கு செல்வி துணிந்தது ஏன்? போதை பழக்கம் மட்டுமின்றி வேறு ஏதேனும் தவறான பழக்கத்துக்கு விக்னேஸ்வரன் ஆளானாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெற்ற மகனையே தாய் கொடூரமாக வெட்டி கொன்று உடலை துண்டு துண்டாக வீசி சென்ற சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×