search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாகாளியப்பன்
    X
    மாகாளியப்பன்

    நெகமம் அருகே 11 மாணவிகளை ‘சில்மி‌ஷம்’ செய்த தலைமை ஆசிரியர் கைது

    நெகமம் அருகே அரசு தொடக்க பள்ளியில் 11 மாணவிகளை சில்மி‌ஷம் செய்த தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

    நெகமம்:

    கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள காட்டம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 25-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக மாகாளியப்பன் (52) என்பவரும், 2 ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். தலைமை ஆசிரியர் சில நாட்களுக்கு முன்பு 4,5-ம் வகுப்பு படிக்கும் 11 மாணவிகளை சில்மி‌ஷம் செய்ததாக மாணவிகள் புகார் கூறினர். உடனே மாணவிகளின் பெற்றோர் தலைமை ஆசிரியரை தேடி சென்றனர். அப்போது அவர் உடல்நிலை சரியில்லை எனக்கூறி ஆஸ்பத்திரியில் சேர்ந்துவிட்டார். மாணவிகளின் பெற்றோர்கள் தேடுவதை அறிந்த அவர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இதனை அறிந்த மாணவிகளின் பெற்றோர் தலைமை ஆசிரியரை அதிகாரி மற்றும் போலீசார் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினர்.

    திடீரென மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர்- பொள்ளாச்சி ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்து விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 7 மாணவிகளின் பெற்றோரை வேனில் ஏற்றி போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

    இந்த நிலையில் மாணவியின் தாய் ஒருவருக்கு தலைமை ஆசிரியர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ஆடியோ வேகமாக பரவியது. அதில் பேசிய தலைமை ஆசிரியர் நான் வேறு விதமாக நடக்கவில்லை. தெரியாமல் நடந்துவிட்டது என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறினார்.

    அதற்கு மாணவியின் தாய் உங்களை நம்பித்தானே நாங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். உங்கள் மீது மதிப்பு மரியாதை வைத்துள்ளோம். நீங்கள் இப்படி நடந்து கொள்ளலாமா? என கேள்வி எழுப்பினார். அதற்கு ஆசிரியர் என்னை மன்னித்து விடுங்கள் நான் வேண்டுமானால் வேறு ஊருக்கு மாறுதல் வாங்கி செல்கிறேன். இந்த பிரச்சினையை விட்டு விடுங்கள் என்று கூறுகிறார்.

    பள்ளி மாணவிகளை தலைமை ஆசிரியர் சில்மி‌ஷம் செய்தது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் நெகமம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதனை தொடர்ந்து சுல்தான் பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்த தலைமை ஆசிரியர் மாகாளியப்பனை நேற்று நள்ளிரவு நெகமம் போலீசார் கைது செய்தனர்.

    அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. பின்னர் மாகாளியப்பனை போலீசார் கோவை மகிளா கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதேபோல் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் கலாதரன் (39). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் திருப்பூர் பூலுவபட்டி பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கலாதரனின் மனைவி குழந்தையுடன் கேரளாவுக்கு சென்று விட்டார். கலாதரன் மட்டும் திருப்பூரில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் தங்கியிருந்த வீட்டின் அருகே வசிக்கும் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்தி சென்றார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலாதரனை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது‌.

    இதனைதொடர்ந்து கலாதரனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×