search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    வானூர் அருகே கார் மோதி 2 வாலிபர்கள் பலி

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியாகினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள நல்லாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 32). மெக்கானிக்.

    இவர் கிளியனூரில் நடைபெற்ற உறவினர் திருமண விழாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். திருமண நிகழ்ச்சி முடிந்தவுடன் ராஜசேகர், அவரது மகன் ஹரீஸ் (16) மற்றும் உறவினர்கள் அமுதவாணன் (18), ராமர் (32) ஆகிய 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கிளியனூரில் இருந்து நல்லாவூருக்கு புறப்பட்டனர்.

    நள்ளிரவு 12.30 மணி அளவில் புதுவை-திண்டிவனம் 4 வழிச்சாலையில் உள்ள கொத்தாமூர் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த ஸ்ரீதர் (20) என்பவர் மற்றும் சென்னை கிண்டியை சேர்ந்த விஜய் (18) ஆகிய 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் எதிரே வந்தனர்.

    எதிர்பாராத விதமாக ராஜசேகர் மற்றும் ஸ்ரீதர் ஆகியோரின் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் 2 மோட்டார் சைக்கிள்களிலும் இருந்த 6 பேரும் கீழே விழுந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் திடீரென்று ராஜசேகர், ஸ்ரீதர் ஆகிய 2 பேர் மீதும் ஏறி இறங்கியது.

    இதில் ராஜசேகர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஸ்ரீதர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். விபத்து குறித்து கிளியனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    உடனே இன்ஸ்பெக்டர் மைகேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த ஸ்ரீதர் மற்றும் விஜய், அமுதவாணன், ராமர், ஹரீஸ் ஆகிய 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஸ்ரீதர் பரிதாபமாக இறந்தார். மற்ற 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் பலியான ஸ்ரீதர், ராஜேசேகர்.

    Next Story
    ×