search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பாளை அருகே அரசு பெண் ஊழியரை வெட்டிக்கொன்ற கணவர் கைது

    பாளை அருகே நடத்தை சந்தேகத்தில் அரசு பெண் ஊழியரை வெட்டிக்கொன்றேன் என்று கைதான கணவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    நெல்லை:

    பாளை அருகே உள்ள இட்டேரி முத்தமிழ் நகரை சேர்ந்தவர் லோகநாதன் மகள் வித்யா (வயது 28). இவர் பாளையில் உள்ள தேசிய மாணவர் படை அலுவலகத்தில் அரசு ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது முதல் கணவர் விபத்தில் இறந்து விட்டார். இதனால் வித்யா நாங்குநேரி அருகே உள்ள முதலைகுளத்தை சேர்ந்த ஆறுமுக நயினார் (29) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

    இந்த தம்பதிக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து இட்டேரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வித்யா குழந்தையை பராமரித்து வந்தார். குழந்தையை பார்க்க ஆறுமுக நயினார் அவ்வப்போது இட்டேரிக்கு வந்து சென்றார்.

    வித்யா அடுத்த மாதத்தில் இருந்து வேலைக்கு செல்ல வேண்டி இருப்பதால் பாளையில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்கும்படி ஆறுமுகநயினாரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் முதலைகுளத்தில் உள்ள தனது வீட்டில் தங்கி வேலைக்கு செல்லுமாறு கூறினார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் ஆறுமுக நயினார் இட்டேரியில் உள்ள வித்யா வீட்டுக்கு சென்றார். அப் போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுக நயினார் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் வித்யாவை சரமாரியாக வெட்டி கொன்றதாக கூறப்படுகிறது.

    பின்னர் அவர் அங்கு இருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி ஆறுமுக நயினாரை தேடி வந்தனர்.

    இதையடுத்து நேற்று இரவு தலைமறைவாக இருந்த ஆறுமுக நயினாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் ஆறுமுகநயினார் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது மனைவி சொந்த ஊருக்கு வராமல் பாளையில் தனி வீடு எடுத்து தங்க வேண்டும், அங்கிருந்து தான் வேலைக்கு செல்ல வேண்டும் என்றார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. மேலும் அவர் நடத்தை மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் நான் கோபமாக இருந்தேன். இந்நிலையில் சம்பவத்தன்று நான் சென்று அவளை முதலைகுளத்திற்கு அழைத்தபோது அவள் வர மறுத்தாள். இதனால் ஆத்திரமடைந்த நான் அவளை அரிவாளால் வெட்டி கொலை செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×