search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா தண்ணீர்
    X
    பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா தண்ணீர்

    பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வரத்து அதிகரிப்பு

    கிருஷ்ணா நீர் வரத்து நேற்று முதல் வினாடிக்கு 488 கனஅடியாக உயர்ந்தது. தண்ணீர் வரத்து இதே போல் நீடித்தால் பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளது.
    ஊத்துக்கோட்டை:

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

    ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு வழங்க வேண்டும்.

    கடந்த வருடம் வறட்சி நிலவியதால் ஜூலை மாதத்தில் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கவில்லை.

    ஆகஸ்டு மாதத்தில் கண்டலேறு அணைக்கு தண்ணீர் வந்து சேறும் சோமசீலா அணை நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் கண்டலேறு அணைக்கு பெரும் அளவில் தண்ணீர் வந்து சேர்ந்தது.

    இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையிலிருந்து செப்டம்பர் மாதம் 25-ந் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் 28-ந் தேதி பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்தது.

    முதலில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட்டனர். தற்போது வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடிவீதம் திறக்கப்படுகிறது.

    கண்டலேறு அணையிலில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியிலிருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணிக்கு நீர்மட்டம் 29. 96 அடியாக பதிவானது. 1730 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    கிருஷ்ணா நதி நீர் வரத்து கடந்த 20-ந் தேதி முதல் சராசரியாக 400 கனஅடி வீதம் வந்தது. நேற்று முதல் தண்ணீர் வரத்து வினாடிக்கு 488 கனஅடியாக உயர்ந்தது. தண்ணீர் வரத்து இதே போல் நீடித்தால் பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளது.

    Next Story
    ×