search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவாரம் பாடல்களை வெளியிட்ட சாந்தலிங்கம் மருதாசல அடிகளார்
    X
    தேவாரம் பாடல்களை வெளியிட்ட சாந்தலிங்கம் மருதாசல அடிகளார்

    ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் பாடிய தேவாரப் பாடல்கள் - பேரூர் ஆதினம் வெளியிட்டார்

    பேரூர் ஆதின மடத்தில் நடைபெற்ற விழாவில் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் பாடிய தேவாரப் பாடல்களை பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் இன்று வெளியிட்டார்.
    கோவை:

    தமிழர்களின் பக்தி கலாச்சாரத்தை உலகுக்கு பறைச்சாற்றும் நோக்கத்தில் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசையில் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் பாடிய 6 தேவாரப் பாடல்கள் இன்று வெளியிட்டப்பட்டன.

    பேரூர் ஆதின மடத்தில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் பாடல்களை வெளியிட ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சிவ கணேஷ் பெற்றுக் கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் பேரூர் ஆதினம் சாந்தலிங்கம் மருதாசலம் பேசியதாவது: 

    திருமுறைகள் என்றென்றும் கயிலையில் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்று நம்புவது நம்முடைய மரபு. தென் கயிலாய மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஈஷா யோகா மையம் பல்வேறு வகையான சமயப் பணிகள், சமூக பணிகளை ஆற்றி வருகிறது.

    அதில் ஓர் உன்னத பணியாக தேவாரப் பாடல்கள் இன்று வெளியிடப்படுகிறது. தமிழுக்காக ஏராளமான பணிகள் செய்து வரும்
    பேரூர் ஆதினத்தில் இதை வெளியிடுவது பெருமைக்குரியது.

    ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு பல்வேறு பணிகளுக்கு இடையே இந்தப் பணியையும் எடுத்துள்ளது தமிழுக்காகவும், சைவத்துக்காகவும் ஆற்றிக் கொண்டிருக்கும் தொண்டினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என தெரிவித்தார்.

    தேவார பாடல்களை பாடிய ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள்

    ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் பாடியுள்ள தேவாரம் தொடர்பாக சத்குரு கூறுகையில், “தமிழ் கலாசாரம் என்பது அடிப்படையில் ஒரு பக்தி கலாசாரம். பக்தியையே ஒரு மூலமாக வைத்து வளர்ந்த கலாசாரம். பக்தி என்றால் அது வெறும் கடவுள் பற்றி அல்ல. நீங்கள் ஏதோ ஒரு
    தன்மையை ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு போக வேண்டுமென்றால், அதற்கு பக்தி அவசியம்.

    விளையாட்டு, இசை, கலை, தொழில் என அது எதுவாக இருந்தாலும், அதை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல அதற்கு பக்தி தேவை.
    பக்தி என்றால் எல்லையில்லாத ஈடுபாடு. யார் முழு பக்தியுடன் ஒரு செயலில் இறங்குகிறார்களோ, அது சின்னதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, அவர்கள் எப்போதும் பரவசத்தில் இருப்பார்கள். தமிழ் கலாச்சாரத்தில் பரவசத்திலேயே வாழ்ந்த பல பக்தர்கள் இருக்கிறார்கள்.

    குறிப்பாக, திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர் போன்ற பல மகான்கள் பக்தி பரவசத்திலேயே உருவாக்கிய கலாச்சாரம் இந்த தமிழ் கலாச்சாரம். அந்த பக்தியின் வெளிப்பாடு தான் தேவாரம். பக்தியிலேயே வளர்ந்து வந்த நம் சம்ஸ்கிரிதி குழந்தைகளின் இனிப்பான குரலில் தேவாரத்தை நீங்கள் கேட்டு ரசிக்க வேண்டும். பரவச நிலைக்கு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    இந்த விழாவில் எழுத்தாளர், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா, ரூட்ஸ் தொழில் குழுமங்களின் இயக்குநர் பாலசுப்பிரமணியம், தவத்திரு சந்தாலிங்க அடிகளார் கல்லூரி மாணவிகளும் கலந்துகொண்டனர். ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் ஒரு தேவாரப் பாடலை பாடினர்.

    தில்லை வாழ் அந்தணர், வாணனை மதி சூடிய, பித்தா பிறை சூடி, மந்திரம் ஆவது நீறு, மடர் பிறை கண்ணியானை, தோடுடைய செவியன்... என தொடங்கும் 6 தேவாரப் பாடல்களும் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் அதிகாரப்பூர்வ யு-யூடிப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளன.
    Next Story
    ×