search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
    X
    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

    குரூப்-4 தேர்வு மோசடி: சென்னை தரகரை பிடிக்க போலீசார் தீவிரம்

    குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சென்னை தரகரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது.

    சுமார் 16½ லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். நவம்பர் மாதம் குரூப்-4 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    அந்த தேர்வில் முதல் 100 இடங்களைப் பிடித்தவர்களில் 39 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பது தெரிந்தது. அதிலும் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் அவர்கள் தேர்வு எழுதி இருந்ததும், அவர்கள் அனைவரும் வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் குரூப்-4 தேர்வில் தில்லுமுல்லு நடந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

    இதுபற்றி டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் விசாரித்தபோது குரூப்-4 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர் 46 வயதான ஆடு மேய்க்கும் தொழிலாளி என்று தெரிந்தது. இதுபற்றி புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது குரூப்-4 தேர்வில் முறைகேடுகள் நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களில் 99 பேர் அழியும் மை மூலம் தேர்வு எழுதியது தெரிந்தது. அந்த 99 பேரும் தலா ரூ.9 லட்சம், ரூ.15 லட்சம் வரை பணம் கொடுத்து தங்களது விடைத்தாளை மாற்ற செய்துள்ளனர். தேர்வுத்துறை ஊழியர்கள் உதவியுடன் இடைத்தரகர்கள் கும்பல் விடைத்தாள்களை மாற்றி உள்ளது.

    99 பேரிடமும் ரூ.12 கோடி வரை பணம் வாங்கிய மோசடி கும்பலால் 39 பேரின் விடைத்தாள்களையே மாற்ற முடிந்தது. அந்த 39 பேரும் குரூப்-4 தேர்வில் மாநிலத்தில் முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளனர்.

    இந்த மோசடி உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகமும், சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் அதிரடி நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். பணம் கொடுத்து தேர்வாக முயற்சி செய்த 99 பேரும் மீண்டும் தேர்வு எழுத முடியாதபடி வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக மோசடி செய்தவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. தேர்வு எழுதிய 3 பேர் உள்பட 9 பேரை இதுவரை சி.பி.சி.ஐடி. போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்டவர்கள் கொடுக்கும் தகவல்கள் அடிப்படையில் மேலும் பலர் தேடப்பட்டு வருகிறார்கள்.

    நேற்று டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஓம்காந்தன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரது வீட்டில் சோதனை நடத்திய போலீசார் 2 செல்போன்களை கைப்பற்றினார்கள். அந்த போன்களில் ஓம்காந்தன் குரூப்-4 தேர்வு மோசடியில் ஈடுபட்டவர்களுடன் அடிக்கடி பேசி இருப்பது தெரிய வந்தது. இவருக்கு சென்னை டி.பி.ஐ.யில் இடைத்தரகராக உள்ள பழனி என்பவர் மூலம் முகப்பேரைச் சேர்ந்த ஜெயக்குமார் பற்றி தெரிய வந்துள்ளது.

    ஜெயக்குமார்தான் குரூப்-4 தேர்வு மோசடியில் முக்கிய குற்றவாளி ஆவார். இவர்தான் தேர்வு எழுதியவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி இருக்கிறார். அதோடு தேர்வு எழுதிய 99 பேரையும் எங்கு தேர்வு எழுத வேண்டும்? அழியும் பேனா மையால் எப்படி எழுத வேண்டும்? என்பன போன்ற திட்டங்களை வகுத்து கொடுத்துள்ளார்.

    அதுமட்டுமின்றி ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட தேர்வுத்தாளை ஓடும் வாகனத்திலேயே மாற்றியதும் ஜெயக்குமார் தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் பிடிபட்டால்தான் குரூப்-4 தேர்வில் நடந்த முறைகேடுகள் அனைத்தும் வெட்ட வெளிச்சத்துக்கு வரும்.

    கடந்த 5 ஆண்டுகளாக தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட பல தேர்வுகளில் இவர் கைவரிசை காட்டி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக போலீஸ் தேர்வில் இவர் அதிக முறைகேடு செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    தேர்வு தொடர்பாக பயிற்சி அளிக்கும் தேர்வு மையங்களுடனும் ஜெயக்குமாருக்கு தொடர்பு இருந்துள்ளது. அந்த பயிற்சி மையங்கள் உதவியுடனும் அவர் மோசடியில் ஈடுபட்டுள்ளார். சென்னை, மதுரை உள்பட பல ஊர்களில் உள்ள பயிற்சி மையங்களில் அவர் தொடர்பு வைத்துள்ளார்.

    மதுரையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் போலீஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்களில் 65 பேர் தேர்வாகி உள்ளனர். அந்த தேர்வு மையத்துக்கும் சென்னை தரகர் ஜெயக்குமாருக்கும் தொடர்பு இருப்பதை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.

    எனவே அந்த மையத்தில் போலீஸ் தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்களும் மாற்றப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.

    எனவே போலீஸ் தேர்விலும் ஜெயக்குமார் அதிகளவு கைவரிசை காட்டி இருக்கிறார். அவர் பிடிபட்டால் தான் இதுவரை எந்தெந்த தேர்வுகளில் முறைகேடுகள் நடந்து இருக்கிறது என்பது தெரிய வரும்.

    போலீசார் விசாரணை

    சென்னை தரகர் ஜெயக்குமார் தனி நபராக இருந்து இந்த மோசடியை செய்யவில்லை. தனி நபராக இத்தகைய மோசடியை செய்யவும் இயலாது. அவருக்கு அரசின் பல்வேறு துறை ஊழியர்கள், அதிகாரிகள் உதவிகள் செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது.

    ஜெயக்குமார் சிக்கினால் அவருக்கு உதவி செய்த அதிகாரிகள் பற்றியும் தெரிய வரும். இதனால் அதிகாரிகள் பலர் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

    Next Story
    ×