search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி காட்சி.
    X
    சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி காட்சி.

    திருச்சியில் இன்று பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை

    திருச்சியில் இன்று பிரபல ரவுடியை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த 8 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    திருச்சி:

    திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவை சேர்ந்த தனபால் மகன் புகழேந்தி (வயது 28). இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருச்சி உறையூர் ஜிம் மணி என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் புகழேந்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அவர் தினமும் தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இன்று காலை போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். பெரிய செட்டி தெரு வழியாக சென்றபோது அங்கு மறைவான பகுதியில் பதுங்கியிருந்த 8 பேர் கும்பல் திடீரென புகழேந்தியை வழிமறித்து அரிவாளால் வெட்ட முயன்றனர். அதிர்ச்சியடைந்த புகழேந்தி மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பியோட முயன்றார்.

    இருப்பினும் மர்ம நபர்கள் விரட்டிச்சென்று புகழேந்தியை மடக்கி பிடித்து சரமாரி அரிவாளால் வெட்டினர். இதில் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுப்பட்ட புகழேந்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து மர்மநபர்கள் மோட்டார் சைக்கிள்களில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையை நேரில் பார்த்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் புகழேந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புகழேந்தியை கொலை செய்த மர்மநபர்கள் யார், எதற்காக கொலை செய்தனர் என்று விசாரணையை தொடங்கினர். முதல் கட்ட விசாரணையில் ஜிம் மணி கொலைக்கு பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×