search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோடியர் மில்லின் முகப்பு தோற்றம்
    X
    ரோடியர் மில்லின் முகப்பு தோற்றம்

    வரும் ஏப்ரல் மாதம் முதல் நூற்றாண்டு பழமை வாய்ந்த ரோடியர் மில் மூடல்

    புதுவையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ரோடியர் மில் வரும் ஏப்ரல் மாதம் முதல் நிரந்தரமாக மூடப்படுவதாக அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    1800-ம் ஆண்டுகளில் பிரெஞ்சு ஆட்சியின்கீழ் புதுவை இருந்தபோதிலும் ஆங்கிலேயர்களும் இங்கு வசித்து வந்தனர். 1898-ம் ஆண்டு லண்டனை தலைமையகமாக கொண்ட ஒரு பிரிட்டிஷ் நிறுவனத்தால் ரோடியர் மில் 26 ஏக்கரில் தொடங்கப்பட்டது. இந்த மில்லை ரொதியர் என்ற பிரெஞ்சுக்காரர் தொடங்கினார். நாளடைவில் அந்த பெயர் மருவி ரோடியர் என்று ஆனது.

    அப்போது 300 தறிகளுடன் பல வண்ண துணிகள் தயாரிக்கும் வசதியுடன் மில் தொடங்கப்பட்டது. ஸ்பின்னிங், காட்டன் துணி நெய்தல், செயற்கை இழை தயாரிப்பு, சாயம் தோய்த்தல், சலவை போன்ற அனைத்து பணிகளும் இங்கேயே நடந்தன. தொடக்கத்தில் இங்கு உற்பத்தியான துணிகள் லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. மூலப்பொருட்களை கொண்டுவரவும், உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்லவும் வசதியாக 1899-ம் ஆண்டு மில்லுக்குள் ரெயில் பாதை அமைக்கப்பட்டது.

    துணிகள் தயாரிப்பதற்கான கச்சா பொருட்கள் இந்திய பகுதிகளில் இருந்தும், அமெரிக்காவில் இருந்தும் பெறப்பட்டன. 1924-ம் ஆண்டு இந்த மில் ஆங்கிலோ பிரெஞ்சு டெக்ஸ்டைல்ஸ் என்று அழைக்கப்பட்டது. இதற்கிடையே 11.26 ஏக்கரில் பி யூனிட்டும் (நியு மில்), 1975-76ல் 13.74 ஏக்கரில் அய்யங்குட்டிபாளையத்தில் சி யூனிட்டும் (கேன்வாஸ் மில்) தொடங்கப்பட்டது.

    புதுச்சேரி சுதந்திரம் பெற்றதையடுத்து பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியை விட்டு வெளியேற தொடங்கினார்கள். இந்த மில்லையும் லண்டன் நிறுவனத்தினர் விற்க முன்வந்தனர். இதைத்தொடர்ந்து 1980-ம் ஆண்டு ஜூலை மாதம் மும்பையை சேர்ந்த ஜி.என்.ஜாட்டி என்ற தொழிலதிபர் மில்லை விலைக்கு வாங்கி நடத்தினார்.

    அவரது நிர்வாகத்துக்கு வந்த பின் மில்லில் நிர்வாக சீர்கேடு தலைவிரித்தாடியது. தொழிலாளர் போராட்டங்கள் வெடித்தன. இதன் காரணமாக 1983-ம் ஆண்டு மில் மூடப்பட்டது. அந்த காலகட்டத்தில் ரோடியர் மில்லில் சுமார் 7,600 தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். மில்லை திறக்கக்கோரி போராட்டங்கள் வெடித்தன.

    இந்தநிலையில் தேர்தல் பிரசாரத்துக்காக ராஜீவ்காந்தி புதுச்சேரி வந்தார். உப்பளம் இந்திராகாந்தி திடலில் பேசிய அவர் மில்லை திறப்போம் என்று வாக்குறுதி அளித்தார். தேர்தல் முடிந்த பின் 24.12.1985ல் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்து மில்லை தனியாரிடம் இருந்து கையகப்படுத்தி புதுவை அரசிடம் ஒப்படைத்தது. அதன்பின் அவசரகதியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 10.6.1986-ல் மில் இயங்க தொடங்கியது.

    ஐ.ஏ.எஸ். அதிகாரியான பி.எம். நாயர் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டார். மில்லில் தொழிற்சங்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மில் லாபத்தில் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டது. மில்லில் ராணுவத்துக்கு தேவையான சீருடைகள், பாராசூட் துணிகள் என 93 ரக துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன. அப்போது கிடைத்த லாபத்தொகையில் மில் பெயரில் புதுவையை அடுத்த பட்டானூரில் 55 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. அந்த நிலத்தை வாங்கிய பின் சில காலம் லாபத்தில் இயங்கிய மில் அதன்பின் சரிவு பாதைக்கு திரும்பியது.

    இந்தநிலையில் கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ந்தேதி தானே புயல் தாக்கியது. இதில் மில் கடுமையான சேதத்தை சந்தித்தது. இதைத்தொடர்ந்து மில் மூடப்பட்டது. அதன்பின் 26.3.2012 அன்று மில் திறக்கப்பட்டது. பாலன் சேர்மனாக நியமிக்கப்பட்டு மில்லில் நடந்த ஊழல் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் சுமார் ரூ.130 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆனாலும் தொடர்ந்து மில்லை நடத்த முடியவில்லை. தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டமும் அறிவிக்கப்பட்டது. நிதிநிலையை காரணம் காட்டி 5.11.2013 அன்று தொழிலாளர்களுக்கு லே-ஆப் வழங்கப்பட்டது. 6 மாதங்களுக்கு அறிவிக்கப்பட்ட இந்த லே-ஆப் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. அதிலும் 12 மாதங்களுக்கான லே-ஆப் சம்பளம் வழங்கப்படவில்லை.

    இந்தநிலையில் மில்லை வருகிற ஏப்ரல் மாதம் 30-ந்தேதி முதல் மூட மில்லின் மேலாண் இயக்குனரான பிரியதர்ஷிணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான கடிதம் தொழிலாளர்துறை செயலாளருக்கும், தொழிற்சங்கத்தினருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    அந்த அறிவிப்பில் வருகிற 30.4.2020 முதல் மில் மூடப்படுவதாக கூறியுள்ளார். மில் மூடப்படுவதால் 619 தொழிலாளர்கள் வேலை இழக்கிறார்கள். 7 ஆண்டுகளில் சுமார் ரூ.700 கோடி வழங்கியும் மில் நஷ்டத்தில் இயங்குவதாக குறிப்பிட்டுள்ளார். மில் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு மில்லை தொடர்ந்து இயக்க வாய்ப்பு இல்லை என்று அரசுக்கு அறிக்கை அளித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    மில் நிர்வாகமும் அன்றாட செலவுக்கு அரசின் உதவியையே எதிர்நோக்கி உள்ளது. கடுமையான நஷ்டம் மற்றும் அரசினால் நிதி வழங்க முடியாத நிலை இருப்பதால் மில்லை மூட முடிவு செய்திருப்பதாக அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளார்.

    நூற்றாண்டு பழமை வாய்ந்த ரோடியர் மில் நிரந்தரமாக மூடப்படுவதாக அரசு அறிவித்து இருப்பது தொழிலாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×