search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த பாழடைந்த கட்டிடம்.
    X
    இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த பாழடைந்த கட்டிடம்.

    விழுப்புரத்தில் இளம்பெண் கற்பழித்து கொடூர கொலை

    விழுப்புரத்தில் இளம்பெண் கற்பழித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம்-புதுவை சாலையில் தெற்கு ரெயில்வே குடியிருப்பு உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பல வீடுகள் பாழடைந்து இடிந்து காணப்படுகிறது. எனவே பலர் வெளி இடங்களில் தங்கியுள்ளனர். 10 குடும்பத்தினர் மட்டும் அந்த குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இங்குள்ள பாழடைந்த கட்டிடத்தில் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அரைநிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் இளம்பெண் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் விழுப்புரம் தனிப்பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன், இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    பாழடைந்த கட்டிடத்தில் இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அந்த உடலின் அருகில் கிடந்த செங்கல் ரத்தக் கறையுடன் காணப்பட்டது. யாரோ மர்ம மனிதர்கள் அந்த பெண்ணை கற்பழித்து உள்ளனர். அதன் பின்னர் அவர்கள் செங்கலால் அந்த பெண்ணின் தலை மற்றும் முகத்தில் தாக்கி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர்.

    அடையாளம் தெரியாமல் இருக்க வேண்டி இளம்பெண்ணின் முகத்தை சிதைத்துள்ளனர். கொலை செய்யப்பட்ட அந்த பெண் யார்? என்ற விவரம் தெரியவில்லை. தெற்கு ரெயில்வே குடியிருப்பில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் கடந்த 6 மாதகாலமாக கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து உள்ளது. அங்கு தினமும் ஏராளமான வாலிபர்கள் கஞ்சா புகைத்த போதையில் தள்ளாடி ஆங்காங்கே சாலையில் விழுந்து கிடப்பது வழக்கம்.

    கஞ்சாவுக்கு அடிமையான காமுகர்கள் அந்த இளம்பெண்ணை அங்கு அழைத்து சென்று கற்பழித்து விட்டு கொடூரமாக கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இந்த கொலையில் துப்பு துலக்க போலீஸ் மோப்ப நாய் ராக்கி சம்பவ இடத்துக்கு வர வழைக்கப்பட்டது. அது பெண் பிணமாக கிடந்த இடத்தை மோப்பம் பிடித்து விட்டு வடக்கு ரெயில்வே குடியிருப்பு வரை ஓடியது. பின்னர் திரும்பி வந்து விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு இருந்த தடயங்களை சேகரித்தனர். கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    இளம்பெண் கற்பழித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×