search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    நாட்டறம்பள்ளி அருகே 2 பெண் குழந்தைகள் மர்ம மரணம்

    நாட்டறம்பள்ளி அருகே பொங்கல் திருநாளில் 2 பெண் குழந்தைகள் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாட்டறம்பள்ளி:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை அம்மணாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 34). கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரியா (30). இவர்களது மகள்கள் ஜெயஸ்ரீ (5), தனுஸ்ரீ (3).

    நேற்று முன்தினம் இரவு சுரேஷ் கடையில் வாங்கி வந்த உணவு பொருட்களை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து விட்டு அனைவரும் தூங்கினர். பின்னர் நேற்று காலை வீட்டில் செய்திருந்த காலை உணவை சாப்பிட்ட 2 குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

    பகல் 12 மணியளவில் குழந்தை ஜெயஸ்ரீக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்தாள். உடனடியாக சிறுமியை புதுப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜெயஸ்ரீ வழியிலியே பரிதாபமாக இறந்தார்.

    இதனால் சோகமடைந்த பெற்றோர், இறந்த குழந்தையை வீட்டுக்கு எடுத்து சென்று போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உறவினர்களுக்கு மட்டும் தெரிவித்திருந்தனர். அப்போது மற்றொரு குழந்தை தனுஸ்ரீக்கும் திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

    உடனே தனுஸ்ரீயை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தனுஸ்ரீயும் பரிதாபமாக இறந்தாள். பின்னர் 2 குழந்தைகளையும் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஓட்டல் சாப்பாடு கொடுத்ததால் குழந்தைகள் இறந்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    பொங்கல் திருநாளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

    Next Story
    ×