search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தை ஏற்படுத்திய கார்
    X
    விபத்தை ஏற்படுத்திய கார்

    தஞ்சை அருகே பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்து விபத்து - 4 பெண்கள் பலி

    தஞ்சை அருகே பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த கார் மோதி பெங்களூரை சேர்ந்த 4 பெண்கள் பலியாகினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வல்லம்:

    தஞ்சை அடுத்த வல்லத்தில் பல்கலைக்கழகம் அருகே ஜெபகூடம் உள்ளது. இந்த ஜெபக்கூடத்துக்கு தினமும் ஏராளமானோர் வந்து ஜெபம் மற்றும் அங்கு நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

    நேற்று பொங்கலையொட்டி சிறப்பு ஜெப வழிபாடு நடந்தது. இதில் பங்கேற்க தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பெங்களூர், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.

    இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த பக்தர்களான செல்வி (வயது 48) அவரது மகள் கீர்த்தி (22), கவிதா(25), கன்னியம்மாள் உள்ளிட்ட 50 பேர் வல்லம்புதூரில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு திரும்பி ஜெபக்கூடத்துக்கு செல்வதற்காக திருச்சி சர்வீஸ் சாலையில் நேற்று இரவு நடந்து வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த சாலையில் எதிரே திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சத்தியநாராயணன் ஒரு காரில் தந்தை ராமச்சந்திரன், தாய் ரேவதி ஆகியோருடன் வந்து கொண்டிருந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கார் நடந்து வந்து கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் அலறியடித்து கொண்டு பக்தர்கள் ஓடினர்.

    இருப்பினும் பெங்களூரை சேர்ந்த செல்வி, கவிதா, கீர்த்தி, கன்னியம்மாள் ஆகியோர் மீது கார் மோதி ஏறி இறங்கியது. மற்ற பக்தர்கள் மீதும் அடுத்தடுத்து மோதி நின்றது.

    இந்த கோர விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே செல்வி, கவிதா பரிதாபமாக பலியானார்கள். கீர்த்தி, ஜோதி, கன்னியம்மாள், திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த வியாபாரி பாலகிருஷ்ணன் மற்றும் காரை ஓட்டி வந்த சத்திய நாராயணா, அவரது பெற்றோர் உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்தி, கன்னியம்மாள் ஆகியோர் உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீசார் விசாரணை

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கார் மோதி 4 பெண்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.




    Next Story
    ×