search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசாரை தாக்க முயற்சிக்கும் விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் சதீஷ்
    X
    போலீசாரை தாக்க முயற்சிக்கும் விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் சதீஷ்

    போலீசாரை கல் வீசி தாக்கிய விடுதலை சிறுத்தை பிரமுகர்

    வில்லியனூர் அருகே விசாரணைக்கு அழைக்க சென்ற போலீசாரை கல் வீசி தாக்கிய விடுதலை சிறுத்தை பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
    வில்லியனூர்:

    புதுவை வில்லியனூர், வள்ளுவன் பேட்டையை சேர்ந்தவர் சதீஷ். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலாளராக உள்ளார்.

    அப்பகுதியில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் காரணமாக கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் 2 பேர் நேற்று மாலை வள்ளுவன் பேட்டுக்கு சென்று சதீஷை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்தனர்.

    அப்போது போதையில் இருந்த சதீஷ் 2 போலீசாரையும் ஆபாசமாக திட்டி தாக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் வாக்கி டாக்கி மூலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் தலைமையில் மேலும் 4 போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சதீஷை பிடித்து மோட்டார் சைக்கிகளில் ஏற்றி செல்ல முயன்றனர்.

    ஆவேசமடைந்த சதீஷ் போலீசாரை ஆபாசமாக திட்டி, தள்ளிவிட்டு தப்பி ஓடினார். அவரை பின் தொடர்ந்து விரட்டி சென்ற போலீசார் மீது கல்வீசி தாக்கி ஆபாசமாக திட்டினார்.

    இதையடுத்து ஒரு வழியாக போலீசார் சதீஷை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். சினிமா காட்சி போல் நடந்த இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    வில்லியனூர் பகுதியில் போலீசார் தொடர்ந்து சமூக விரோத கும்பல்களால் தாக்கப்படுவதும், பொது இடங்களில் ஆபாசமாக பேசுவதும் வாடிக்கையாக உள்ளது. போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×