search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாடாலூர் அருகே புளிய மரத்தில் மோதியதில் சேதமடைந்த கார்.
    X
    பாடாலூர் அருகே புளிய மரத்தில் மோதியதில் சேதமடைந்த கார்.

    பெரம்பலூர் அருகே விபத்து- அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேர் பலி

    பெரம்பலூர் அருகே இன்று காலை சாலையோர புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
    பாடாலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா ஆவினங்குடி அருகே உள்ள செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செந்தில்ராஜா (வயது 30), மணிகண்டன் (28), சதீஷ் குமார் (26). வசிஷ்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து (30). இவர் அரசு பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவர்கள் நான்கு பேரும் ஒரு காரில் திருச்சியிலிருந்து திட்டக்குடி நோக்கி சென்று கொண்டு இருந்தனர். இந்த நிலையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக கார் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது.

    இதில் மருதமுத்து, செந்தில் ராஜா ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே காருக்குள் பிணமானார்கள். மணிகண்டன், சதீஷ்குமார் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும், விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பலியானவர்களின் உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×