search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரம் தெற்கு மாவட்ட அமமுக அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை டிடிவிதினகரன் திறந்து வைத்தபோது எடுத்த படம்.
    X
    விழுப்புரம் தெற்கு மாவட்ட அமமுக அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை டிடிவிதினகரன் திறந்து வைத்தபோது எடுத்த படம்.

    எத்தனை தடைகள் போட்டாலும் அதை முறியடித்து வெற்றிபெறுவோம்- டி.டி.வி.தினகரன்

    கெடுபிடியாளர்கள் எத்தனை தடைகளை போட்டாலும் அதை முறியடித்து வெற்றி பெறுவோம் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
    விழுப்புரம்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்ட அலுவலகம் திறப்பு விழா மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சிலை திறப்பு விழா நேற்று மாலை விழுப்புரத்தில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொன்னுசாமி ஓட்டல் அருகில் நடைபெற்றது.

    விழாவில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ஜெயலலிதாவின் சிலையை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, தெற்கு மாவட்ட அலுவலகத்தையும் திறந்து குத்துவிளக்கேற்றி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களால், ஜெயலலிதாவின் உருவத்தை கொடியிலே தாங்கியிருக்கிற அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கடந்த 15.3.2018 அன்று தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் ஒருவழியாக துரோகிகளின் பல்வேறு இடையூறுகளை தாண்டி இன்றைக்கு இந்திய தேர்தல் ஆணையத்தினால் பதிவு பெற்ற ஒரு அரசியல் இயக்கமாக செயல்பட அனுமதி தந்திருக்கிறார்கள்.

    துரோகிகளை எதிர்த்து எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம், ஜெயலலிதாவினால் 30 ஆண்டுகள் கட்டிக்காக்கப்பட்ட இயக்கம், இன்றைக்கு துரோகிகளின் கையில் மாட்டிக்கொண்டு கம்பீரத்தை இழந்து நிற்கிறது.

    நம்மால் ஆட்சிக்கு வந்தவர்களின் கையில் அ.தி.மு.க. இயக்கம் சிக்கிக்கொண்டிருக்கிறது. அதை மீட்டெடுக்க உருவாக்கப்பட்ட ஜனநாயக ஆயுதம்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். விரைவில் நாம் அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம்.

    இன்றைக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நமது இயக்கம் பதிவு பெற்ற அரசியல் இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் நமக்கு ஒரு சின்னம் கொடுப்பார்களா? என்று தேர்தல் ஆணையத்தை அணுகினோம்.

    அதற்கு அவர்கள், உங்கள் இயக்கம் பதிவு பெற்ற இயக்கமாகத்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் தனி சின்னம் எதுவும் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

    செப்டம்பர் 30-ந் தேதியன்று ஒரு அரசாணை போட்டிருக்கிறார்கள். நமது இயக்கம் பதிவு பெறப்போகிறது என்பதை தெரிந்துகொண்டு புதிதாக பதிவு பெற்ற கட்சிகளுக்கு தனியாக சின்னம் கொடுக்கக்கூடாது என்றும், சுயேச்சைகளுக்கு வழங்கப்படுகிற சின்னங்களில் ஏதாவது ஒரு சின்னத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

    இந்த கெடுபிடியாளர்கள் எத்தனை தடைகளை போட்டாலும் அதை முறியடித்து நாம் வெற்றி பெறுவோம். இப்போதைக்கு சிறப்பான சின்னத்தை தேர்ந்தெடுத்து போட்டியிடுவோம். அடுத்த தேர்தலில் நிலையான சின்னம்பெற சட்டப்படியான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற மக்களை பாதிக்கிற திட்டங்கள், ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு எதிராக செய்யப்படும் திட்டங்களை எடுத்து சொல்லவேண்டும்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு முடிவு கட்ட நல்ல வாய்ப்பாக இந்த உள்ளாட்சி தேர்தலை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இந்த உள்ளாட்சி தேர்தலில் நீங்கள் பக்கத்து மாவட்டங்களுக்கு சென்று அங்குள்ள நமது இயக்க நிர்வாகிகள், தொண்டர்களுடன் இணைந்து நமது இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபடவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×